மராத்தா இட ஒதுக்கீடு விவகாரம்: மீண்டும் துவங்கியது போராட்டம்
மராத்தா இட ஒதுக்கீடு விவகாரம்: மீண்டும் துவங்கியது போராட்டம்
ADDED : செப் 18, 2024 04:07 AM

சத்ரபதி சம்பாஜிநகர் : மராத்தா சமூகத்தினருக்கு, ஓ.பி.சி., பிரிவில் இட ஒதுக்கீடு அளிக்ககோரி சமூக செயற்பாட்டாளர் மனோஜ் ஜராங்கே, கடந்த ஓராண்டில் ஆறாவது முறையாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நேற்று துவக்கினார்.
மஹாராஷ்டிராவில், மராத்தா சமூகத்தினரை சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பின் தங்கிய வகுப்பினராக அறிவித்து அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கக்கோரி சமூக செயற்பாட்டாளர் மனோஜ் ஜராங்கே குரல் கொடுத்து வருகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த ஆண்டு செப்., முதல் இதுவரை ஐந்து முறை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டார்.
அனைத்து மராத்தியர்களுக்கும் குன்பி இன சான்றிதழ் வழங்க வேண்டும், மழலையர் பள்ளி முதல் முதுநிலை படிப்பு வரை இலவச கல்வி, அரசு வேலைகளில் மராத்தியர்களுக்கு இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை மனோஜ் வலியுறுத்தி வந்தார். குன்பி என்பது, ஓ.பி.சி., எனப்படும், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை குறிக்கிறது.
இந்நிலையில், இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஓராண்டில் ஆறாவது முறையாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை சொந்த ஊரான அந்தர்வாலி சாரதி கிராமத்தில் மனோஜ் ஜராங்கே நேற்று துவங்கினார்.
அப்போது, “மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு தர மஹாராஷ்டிர அரசு வேண்டுமென்றே மறுக்கிறது. துணை முதல்வர் தேவேந்திர பட்னவிசுக்கு மராத்தா சமூகத்தினர் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கின்றனர்,” என்றார்.

