ADDED : மே 25, 2024 06:07 AM

பெங்களூரு : ''கர்நாடகாவில் சட்டம் - ஒழுங்கு நன்றாகவே உள்ளது. பா.ஜ., அரசு காலத்தில் ஏற்பட்ட தொல்லையால், முதலீட்டாளர்கள், நாட்டை விட்டே வெளியேறினர்,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:
கர்நாடகாவுக்கு பதிலாக, அண்டை மாநிலங்களில் முதலீடு செய்ய, தொழிலதிபர்கள் விரும்புவதாக பா.ஜ.,வினர் குற்றஞ்சாட்டுகின்றனர். இதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும். பா.ஜ.,வினர் முதலில் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
பா.ஜ., ஆட்சியில் ஏற்பட்ட தொந்தரவால், எத்தனை தொழிலதிபர்கள் வெளியேறினர் என்பதை, தெரிந்து கொள்ளட்டும். காங்கிரஸ் அரசு வந்த பின், முதலீடுகள் அதிகரிக்கின்றன. காங்கிரஸ் அரசின் கனரக, நடுத்தர தொழில் அமைச்சர் எம்.பி.பாட்டீல், தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே சிறப்பாக பணியாற்றுகின்றனர்.
லோக்சபா தேர்தல் முடிந்து, நடத்தை விதிகள் நீங்கிய பின், மாநிலத்தில் எத்தனை பேர் முதலீடு செய்தனர் என்பதை விவரிக்கிறோம்.
கர்நாடகா அமைதிக்கும், வளர்ச்சிக்கும் பெயர் பெற்றதாகும். குறிப்பாக பெங்களூருக்கு, தனி சிறப்பு உள்ளது.
மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு நன்றாகவே உள்ளது. முதல்வரும், நானும் நகர்வலம் வருவதை, பா.ஜ.,வினர் கிண்டலாக விமர்சிக்கின்றனர். அவர்கள் எப்படியோ விமர்சிக்கட்டும். நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். மக்களும் எங்களுடன் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

