சம்மன்களை நிராகரித்த விவகாரம் கெஜ்ரிவாலுக்கு 2 வாரம் அவகாசம்
சம்மன்களை நிராகரித்த விவகாரம் கெஜ்ரிவாலுக்கு 2 வாரம் அவகாசம்
ADDED : ஏப் 24, 2024 09:16 PM
புதுடில்லி:அமலாக்கத் துறை அனுப்பிய சம்மன்களை நிராகரித்த வழக்கில், பதில் அளிக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டில்லி நீதிமன்றம் அவகாசம் வழங்கியது.
டில்லி அரசின் 2021 - 2022ம் ஆண்டின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை, விசாரணைக்கு ஆஜராகுமாறு டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பிய 10 சம்மன்களையும் அவர் நிராகரித்தார்.
இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடக் கோரி, டில்லி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த மாஜிஸ்திரேட், அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். சம்மனை நிராகரித்த கெஜ்ரிவால் மீது வழக்குத் தொடர உத்தரவிடுமாறு அமலாக்கத் துறை மனுத்தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு மீது விசாரணை நடத்திய சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராகேஷ் சைல், அரவிந்த் கெஜ்ரிவால் பதில் மனு தாக்கல் செய்ய இரண்டு வாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டார். மே 14ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

