ADDED : ஏப் 24, 2024 01:01 AM

ஷிவமொகா : ''ஈஸ்வரப்பா முகத்திற்கு எத்தனை ஓட்டுகள் விழும் என்று அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்,'' என, அமைச்சர் மது பங்காரப்பா கூறி உள்ளார்.
பள்ளிக்கல்வி அமைச்சர் மது பங்காரப்பா, ஷிவமொகாவில் நேற்று அளித்த பேட்டி:
தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, ராமர் பெயரை பா.ஜ,வினர் பயன்படுத்தினர். ஆனால், அதன்மூலம் ஓட்டுகள் கிடைக்காது என்று தெரிந்ததும், ஹிந்துக்கள் உணர்வுகளை துாண்டும் கீழ்தர அரசியல் செய்கின்றனர்.
சமூகங்கள் இடையில் வெறுப்புணர்வு ஏற்படுத்தி, அரசியலில் ஆதாயம் பெற நினைக்கின்றனர். ஷிவமொகாவில் போட்டியிடும் ஈஸ்வரப்பா தான் டம்மி வேட்பாளர். காங்கிரஸ் வேட்பாளர் கீதாவை டம்மி என்று அவர் கூறுகிறார்.
மகனுக்கு சீட் கிடைக்காததால், தெருவில் நின்று கத்துகிறார். அவருக்கு அரசியலில் கண்ணியம் இல்லை. அவரது முகத்திற்கு எத்தனை ஓட்டுகள் விழும் என்று அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ராகவேந்திரா, ஈஸ்வரப்பா ஆகிய இருவரையும் தோற்கடித்து, கீதா வெற்றி பெற போவது உறுதி. கீதாவுக்கு ஆதரவாக அவரது கணவர் சிவராஜ்குமார் உள்ளார். இதுவரை ஷிவமொகா தொகுதியில் 3.50 லட்சம், மக்களை சந்தித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

