'சனாதன தர்மம் மீதான விரோத போக்கை வெளிப்படுத்தும் காங்.,'
'சனாதன தர்மம் மீதான விரோத போக்கை வெளிப்படுத்தும் காங்.,'
ADDED : ஏப் 08, 2024 05:29 AM

நவாடா : “தேசிய ஒருமைப்பாடுக்கு எதிரான கருத்தும், சனாதன தர்மத்தின் மீதான விரோத போக்கும் காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் வெளிப்படுகிறது,” என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பீஹாரில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. முதற்கட்டமாக நவாடா, கயா, அவுரங்காபாத் மற்றும் ஜமூய் தொகுதிகளுக்கு வரும் 19ல் ஓட்டுப்பதிவு நடக்கவுள்ளது.
ஜமூய் தொகுதியில் பிரசாரம் முடித்த பிரதமர் மோடி, நேற்று நவாடாவில் பா.ஜ., வேட்பாளர் விவேக் தாக்குருக்கு ஓட்டு சேகரித்தார்.
அங்கு நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் செய்ய முடியாத விஷயங்களை, கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ., அரசு சாதித்துள்ளது.
'முத்தலாக்' போன்ற பெண்களுக்கு எதிரான நடைமுறைகளை எதிர்த்து எங்கள் அரசு தைரியமாக செயல்பட்டாலும், காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிளும் சனாதன தர்மத்தை இழிவுபடுத்துவதில் மும்முரமாக உள்ளன. காங்கிரசின் தேர்தல் அறிக்கை, முஸ்லிம் லீக் முத்திரையை சார்ந்துள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான கருத்துக்களை, சனாதன தர்மத்தின் மீதான விரோத போக்கை, அவர்களின் தேர்தல் அறிக்கை வெளிப்படுத்துகிறது.
'இண்டியா' கூட்டணி தலைவர்கள் யாரும் அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கவில்லை என்பதை யாரும் மறக்கக்கூடாது.
நான் அளித்த வாக்குறுதிகளால் இண்டியா கூட்டணி வாயடைத்துஉள்ளது. என்னுடைய நோக்கம் துாய்மையானது என்பதால் வாக்குறுதி அளிக்கிறேன்; அதை நிறைவேற்ற கடுமையாக உழைக்கிறேன். அந்த கூட்டணியில் உள்ளவர்கள் பொய் சொல்லி ஓட்டு சேகரிப்பதில் பெயர் பெற்றவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

