4வது முறையும் என்னை ஆதரிக்க வேண்டும் வாக்காளர்களிடம் பி.சி.மோகன் வேண்டுகோள்
4வது முறையும் என்னை ஆதரிக்க வேண்டும் வாக்காளர்களிடம் பி.சி.மோகன் வேண்டுகோள்
ADDED : ஏப் 22, 2024 07:11 AM

ராஜாஜி நகர்: ''பெங்களூரின் உள்கட்டமைப்புக்கு தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்ய, எனக்கு ஆசி வழங்குங்கள்,'' என பெங்களூரு சென்ட்ரல் லோக்சபா பா.ஜ., வேட்பாளர் பி.சி.மோகன் கேட்டு கொண்டுள்ளார்.
லோக்சபா தேர்தல் நெருங்குவதை ஒட்டி, பெங்களூரு சென்ட்ரல் பா.ஜ., வேட்பாளர் பி.சி.மோகன், சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று மஹாதேவபுராவில் உள்ள வெவ்வேறு அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, தன்னை ஆதரிக்கும்படி கேட்டு கொண்டார்.
மேலும், ராஜாஜி நகரில் தொகுதி எம்.எல்.ஏ., சுரேஷ்குமார், தொகுதி பா.ஜ., தலைவர் சுதர்சன் தலைமையில் பிரமாண்ட, 'ரோடு ஷோ' நடத்தப்பட்டது.
ஏராளமான தொண்டர்கள், பா.ஜ., ஆதரவாளர்கள், 'ரோடு ஷோ'வில் பங்கேற்றனர். சாலையின் இருபுறத்திலும் உள்ள கடைகளில், மக்களிடம் ஓட்டு சேகரித்தனர்.
சுதந்திர பூங்காவில் நடந்த மஹாவீர் ஜெயந்தி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதுபோன்று காந்தி நகர் சட்டசபை தொகுதியிலும் அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தினருடன் ஆலோசனை நடத்தி, ஓட்டு சேகரித்தார். ராஜாஜி நகர் ரோடு ஷோவில் பி.சி.மோகன் பேசியதாவது:
பெங்களூரு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு, நிதியை வாரி வழங்கி உள்ளது. இதனால் தான், மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
மூன்றாம் கட்ட திட்டமும் விரைவில் துவங்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. நீண்ட நாட்களாக மந்த கதியில் இருந்த பெங்களூரு புறநகர் ரயில் திட்டம், துரிதமாக நடந்து வருகிறது.
உலகத்தரத்தில் பையப்பனஹள்ளியில் ரயில் முனையம், மோடி ஆட்சியில் தான் திறக்கப்பட்டது. தென் மாநிலங்களிலேயே இவ்வளவு பிரமாண்டமான, 'ஏசி' வசதி கொண்ட ஒரே ரயில் நிலையம் இது தான். பெங்களூரின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு தொடர்ந்து பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்ய, எனக்கு ஆசி வழங்குங்கள்.
மூன்று முறை என்னை எம்.பி.,யாக்கியதற்கு மிக்க நன்றி. நான்காவது முறையும் நீங்கள் என்னை ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
ராஜாஜி நகரில் பெங்களூரு சென்ட்ரல் பா.ஜ., வேட்பாளர் பி.சி.மோகன் பிரசாரம் செய்தார். உடன், எம்.எல்.ஏ., சுரேஷ் குமார் - இடது. இடம்: பெங்களூரு.

