ADDED : ஏப் 19, 2024 12:51 AM
ஆழப்புழா, கேரளாவின் ஆழப்புழாவில், வாத்துகளுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு உள்ளது, கண்டறியப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், ஆழப்புழா மாவட்டத்தில் இரண்டு கிராமங்களில் வாத்துப் பண்ணைகளில் உள்ள சில வாத்துகள் நோய் வந்து இறந்தன. மற்றவையும் நோயால் பாதிக்கபட்டுள்ளன.
கால்நடை துறையினர் வாத்துகளின் ரத்த மாதிரிகளை சேகரித்து, மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஆய்வகத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பியிருந்தனர். அதன் முடிவுகள் நேற்று வந்தன.
ரத்த மாதிரியில், வாத்துகளுக்கு 'எச்5என்1' எனப்படும் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் தலைமையில் கூட்டம் நடந்தது.
அதில், இது போன்ற சூழ்நிலையில் மத்திய அரசு வகுத்து கொடுத்துள்ள செயல் திட்டத்தின் படி, பறவைக் காய்ச்சல் தோன்றிய பகுதியில் இருந்து 1 கி.மீ., சுற்றளவில் உள்ள வாத்து, கோழி போன்ற வீடுகளில் வளர்க்கப்படும் பறவைகளை கொன்று புதைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக கால்நடை துறை சார்பில் சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், பொது மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும், மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

