ADDED : மார் 27, 2024 11:51 PM
ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில், பசு மாடுகளை கடத்த வந்திருப்பதாக சந்தேகப்பட்டு ஹரியானாவைச் சேர்ந்த நான்கு பேர் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல் நடத்தினர்.
ஹரியானாவின் நுாஹ் மாவட்டத்தைச் சேர்ந்த ஆரிப், கபர், சலீம் மற்றும் ஹபீப் ஆகியோர், ராஜஸ்தானுக்கு ஒரு சரக்கு வேனில் சென்றனர். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு ராஜஸ்தானின் அல்வார் மாவட்டம் குஷ்கேரா கிராமத்துக்கு சென்றனர்.
வேனுடன் புதிய ஆட்களைப் பார்த்த கிராம மக்கள், பசுக்களைக் கடத்தும் கும்பலாக இருக்கும் என சந்தேகம் அடைந்தனர்.
நான்கு பேரையும் சுற்றிவளைத்து சரமாரியாகத் தாக்கினர். தகவல் அறிந்து போலீசார் வந்தனர். காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த நான்கு பேரையும் கிராம மக்களிடம் இருந்து மீட்டனர். மேலும், அந்த வேனில் இருந்த ஏழு பசு மாடுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
நான்கு பேரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

