ADDED : ஜூன் 15, 2024 04:21 AM
மாண்டியா: லோக்சபா தேர்தலில், குமாரசாமி வெற்றி பெற்றதுடன், மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ளார். இதனால் குஷியடைந்த ஆதரவாளர் ஒருவர், மேலுகோட்டேவில் மண்டியிட்டு படியேறி, வேண்டுதலை நிறைவேற்றினார்.
லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் குமாரசாமி போட்டியிட்டார். காங்கிரஸ் வேட்பாளராக ஸ்டார் சந்துரு களமிறங்கியிருந்தார்.
மாண்டியாவின், சிக்க மாண்டியா கிராமத்தை சேர்ந்த சங்கரின் மகன் லோகேஷ், குமாரசாமியின் தீவிர விசுவாசி. குமாரசாமி வெற்றி பெற்று, மத்திய அமைச்சரானால் மேலுகோட்டேவின், யோக நரசிம்ம சுவாமி கோவிலுக்கு மண்டியிட்டு வருவதாக, லோகேஷ் பிரார்த்தனை செய்திருந்தார்.
குமாரசாமி அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், கனரக தொழில் துறை அமைச்சராகவும் பதவி ஏற்றுள்ளார்.
தன் வேண்டுதல் நிறைவேறியதால், லோகேஷ் நேற்று முன் தினம், மண்டியிட்டபடி மலையேறி, யோக நரசிம்ம சுவாமியை தரிசனம் செய்து, பிரார்த்தனையை நிறைவேற்றினார். சிறப்பு பூஜைகளும் நடத்தினார்.
இதுகுறித்து நேற்று லோகேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நான் போட்டோ கிராபராக பணியாற்றுகிறேன். நிகழ்ச்சிக்காக மேலுகோட்டே வந்த போது, குமாரசாமியின் வெற்றி குறித்து, நண்பர்களுடன் உரையாடினேன். அப்போது நண்பர்கள், 'குமாரசாமி வெற்றி பெற்றால், என்ன செய்வாய்' என, கேட்டனர்.
நானும் இதே மேலுகோட்டே வந்து, மண்டியிட்டு மலையேறி சுவாமியை தரிசிப்பேன் என, பதிலளித்தேன். என் வேண்டுதல் பலித்தது. குமாரசாமி மத்திய அமைச்சராகி உள்ளார். எனவே பிரார்த்தனையை நிறைவேற்றினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

