/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
நாட்டின் யூரியா நுகர்வு 25 லட்சம் டன் குறையும்
/
நாட்டின் யூரியா நுகர்வு 25 லட்சம் டன் குறையும்
ADDED : மார் 03, 2024 02:23 AM

புதுடில்லி:ரசாயன உரங்களின் பயன்பாட்டை தடுக்கும் அரசின் முயற்சி, நானோ யூரியாவின் தேவை அதிகரிப்பு ஆகியவற்றால், இந்தியாவின் வழக்கமான யூரியா நுகர்வில், இந்த நிதியாண்டில் 25 லட்சம் டன் குறையும் என, மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் மேலும் கூறியதாவது:
ரசாயன உரங்கள் பயன்படுத்துவதை தடுக்கவும், மாற்று உரங்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதைத் தொடர்ந்து நானோ திரவ யூரியா பயன்பாடு அதிகரித்து வருகிறது.
கடந்த நிதியாண்டில் யூரியா பயன்பாடு 357 லட்சம் டன்னாக இருந்தது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில், மொத்த யூரியா நுகர்வு 317 லட்சம் டன்னாக இருந்தது. வழக்கமான யூரியா பயன்பாடு குறைந்ததற்கு, நானோ திரவ யூரியா தேவை அதிகரித்ததே காரணம்.
வருகிற ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30ம் தேதி வரையிலான, 2024 - 25 காரிப் பருவத்திற்கான, பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு, ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியமாக 24,420 கோடி ரூபாய் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.

