மின்னணு உதிரிபாக உற்பத்தி திட்டம் முதல் மாநிலமாக தமிழகம் வெளியீடு
மின்னணு உதிரிபாக உற்பத்தி திட்டம் முதல் மாநிலமாக தமிழகம் வெளியீடு
ADDED : ஏப் 30, 2025 11:49 PM

சென்னை:
தமிழ்நாடு மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
மின்னணுவியல் துறையில் மதிப்பு கூட்டப்பட்ட உற்பத்தியை ஊக்குவித்திடவும், குறைகடத்தி துணைப் பிரிவுகளில் பெருமளவு முதலீடுகளை ஈர்த்திடவும், 'தமிழ்நாடு செமிகண்டக்டர் மற்றும் மேம்பட்ட மின்னணு கொள்கை - 2024'ஐ தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
இதையடுத்து, தற்போது மின்னணுவியல் உற்பத்தி சூழலமைப்பை மேலும் மேம்படுத்த, மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி சிறப்பு திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மின்னணு உபகரணங்கள் உற்பத்தி திட்டம் என்ற திட்டத்தின் கீழ் பயனடையும் நிறுவனங்களை, மாநிலத்திற்கு ஈர்த்திடும் வகையில், மத்திய அரசு திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மானியத்திற்கு இணையாக, தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை வழங்க, இந்த திட்டம் வழிவகை செய்யும்.
இதன் வழியே தமிழகத்தில் 30,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 60,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க இயலும் என, தமிழக அரசு தெரிவித்துஉள்ளது.

