தனியார் துறை வளர்ச்சி 10 மாதங்களில் இல்லாத சரிவு
தனியார் துறை வளர்ச்சி 10 மாதங்களில் இல்லாத சரிவு
UPDATED : டிச 17, 2025 08:13 AM
ADDED : டிச 17, 2025 01:03 AM

புதுடில்லி: உள்நாட்டு தேவை குறைந்துள்ளதால், நாட்டின் தனியார் துறை வளர்ச்சி, கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவு இம்மாதம் குறைந்துள்ளதாக, எச்.எஸ்.பி.சி., வங்கி யின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தயாரிப்பு மற்றும் சேவைகள் துறை நிறுவனங்களுக்கான புதிய ஆர்டர்கள் குறைந்துள்ளதால், தனியார் துறை வளர்ச்சியை குறிக்கும் எச்.எஸ்.பி.சி., பிளாஷ் இந்தியா கூட்டு பி.எம்.ஐ., குறியீடு, இம்மாதம் 58.90 புள்ளிகளாக குறைந்துள்ளது. இந்த குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் வளர்ச்சியையும்; குறைவாக இருந்தால் சரிவையும் குறிக்கும். வளர்ச்சி வேகம் குறைந்துள்ளதே தவிர சரிவு பாதைக்கு செல்லவில்லை.
ஆர்டர்கள் சரிவு மற்றும் பணியமர்த்தல்களில் முன்னேற்றம் ஏதும் இல்லாதது, உள்நாட்டு தேவை குறைந்து வருவதை உணர்த்துகிறது. அதே நேரத்தில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளில் இருந்து புதிய ஆர்டர்கள் அதிகரித்துள்ளதால், ஏற்றுமதி ஆர்டர்கள் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டிஉள்ளது.

தயாரிப்பு துறை பி.எம்.ஐ., கடந்த நவம்பரில் 56.60 புள்ளிகளாக இருந்த நிலையில், இம்மாதம் 55.70 புள்ளிகளாக குறைந்துள்ளது. சேவைகள் துறை பி.எம்.ஐ., 59.80 புள்ளிகளில் இருந்து 59.10 புள்ளிகளாக குறைந்து உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

