பைஜூஸ் - பி.சி.சி.ஐ., பிரச்னை முடிவெடுக்க ஒரு வாரம் கெடு
பைஜூஸ் - பி.சி.சி.ஐ., பிரச்னை முடிவெடுக்க ஒரு வாரம் கெடு
ADDED : பிப் 08, 2025 09:55 PM

புதுடில்லி,:தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயமானது, கல்வி தொழில்நுட்ப நிறுவனமான 'பைஜூஸ்' மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ., இடையேயான செட்டில்மென்ட் குறித்து, ஒரு வாரத்துக்குள் முடிவெடுக்க வேண்டுமென, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
நிறுவனத்தின் கடன் வழங்கியோர் குழுவை மாற்றியமைத்ததற்கு எதிராக, பைஜூஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம், இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
பி.சி.சி.ஐ.,க்கு செலுத்த வேண்டிய 158 கோடி ரூபாய் பாக்கியை செலுத்துவதாக, பைஜூஸ் தெரிவித்திருந்தது. இதையடுத்து, இந்நிறுவனத்துக்கு எதிராக தாக்கல் செய்திருந்த கார்ப்பரேட் திவால் நிலை செயல்முறையை திரும்பப் பெற, பி.சி.சி.ஐ., முடிவு செய்தது.
இதற்கான விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்த நிலையில், இதுகுறித்து எந்த முடிவையும் சட்ட தீர்ப்பாயம் எடுக்கவில்லை. இந்நிலையில், அடுத்த ஒரு வாரத்துக்குள் இதுகுறித்து முடிவெடுக்குமாறு, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்துக்கு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

