ADDED : மார் 27, 2024 11:48 PM

சென்னை: தமிழக தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க, சென்னை, கோவை உட்பட, 10 இடங்களில், 100 கோடி ரூபாய் செலவில் ஏற்றுமதி மண்டலங்கள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு வெளியாகி இரு ஆண்டுகளாகியும், இன்னும் பணி துவங்கப்படவில்லை.
தமிழகத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பல நிறுவனங்கள், மோட்டார் வாகனம், மின் சாதனங்கள், ஜவுளி என, பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகின்றன.
அந்நிறுவனங்களுக்கு தேவைப்படும் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருட்களை, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வினியோகம் செய்கின்றன. வெளிநாட்டு நிறுவனங்கள், ஏற்றுமதி அதிகம் செய்கின்றன.
எனவே, தமிழகத்தைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களும் சர்வதேச அளவில் போட்டியிடவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் தமிழக அரசு, முக்கிய இடங்களில் ஏற்றுமதி மண்டலங்கள் அமைக்க முடிவு செய்தது.
அதன்படி, சென்னை, கோவை, திருப்பத்துாரில் ஆம்பூர், கோவையில் பொள்ளாச்சி, திருப்பூர், காஞ்சிபுரம், மதுரை, கிருஷ்ணகிரியில் ஓசூர், கரூர், துாத்துக்குடியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, 100 கோடி ரூபாய் செலவில் ஏற்றுமதி மண்டலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான அறிவிப்பு, 2022ல் வெளியானது.
ஒவ்வொரு ஏற்றுமதி மண்டலத்திலும், தமிழகத்தில் உள்ள நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு, வெளிநாடுகளில் சந்தையை ஏற்படுத்தி தருவது, உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் எந்த நாடுகளில் குறைந்த விலைக்கு கிடைக்கிறது என்பது உள்ளிட்ட தகவல்களை வழங்குவது ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், உற்பத்தி செய்யும் பொருட்களை பாதுகாப்பாக வைக்க கிடங்குகள் வசதி ஏற்படுத்தி தரப்படும். மண்டலம் அமைக்கும் பணியை தொழில் துறை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையுடன் இணைந்து மேற்கொள்கிறது.
இந்த மண்டலம் அமைப்பது தொடர்பாக, 2023 ஜூன், 19; இந்தாண்டு பிப்., 9ம் தேதி அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இருப்பினும் இதுவரை ஏற்றுமதி மண்டலம் அமைக்கும் பணிகள் துவங்கப்படவில்லை.
எனவே, ஏற்றுமதி மண்டலத்தை விரைந்து துவக்குமாறு தொழில் நிறுவனங்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
சென்னை, கோவை உட்பட, 10 இடங்களில், 100 கோடி ரூபாய் செலவில் ஏற்றுமதி மண்டலங்கள் அமைப்பதாக அறிவிப்பு வெளியாகி இரு ஆண்டுகளாகியும், இன்னும் பணி துவங்கப்படவில்லை.

