ADDED : மே 16, 2025 11:06 PM
பெலகாவி: முஸ்லிம்களின் புனித நுால் எரிக்கப்பட்டதை கண்டித்து, பெலகாவியில் நடந்த போராட்டத்தின்போது, போலீசார் மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெலகாவி அருகே சாந்திபஸ்தவாடா கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மசூதியில் இருந்த குர்ஆன் புத்தகத்தை, 12ம் தேதி மர்ம நபர்கள் எரித்தனர். இதை கண்டித்து பெலகாவியில் நேற்று ஒரு சமூகத்தினர் போராட்டம் நடத்தினர். இதற்கு ஆதரவு தெரிவித்து தாங்களாக முன்வந்து சிலர் கடைகளை அடைத்தனர்.
பெலகாவி வடக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆசிப் செய்ட் தலைமையில், ஒரு குழுவினர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்றனர். அங்கு போராட்டம் நடத்தினர்.
அப்போது கூட்டத்தில் இருந்து சிலர் செருப்புகளை எடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீசார் மீது வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் லேசான தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர்.
