பெண்ணின் பல் குறித்து கிண்டல் தட்டிக்கேட்ட கணவர் மீது தாக்குதல்
பெண்ணின் பல் குறித்து கிண்டல் தட்டிக்கேட்ட கணவர் மீது தாக்குதல்
ADDED : ஆக 27, 2025 10:58 PM
டி.ஜே.ஹள்ளி : : பெண்ணின் பல் அமைப்பை கிண்டல் செய்ததை தட்டிக்கேட் ட கணவர், சகோதரர்கள் மீது, மூன்று பேர் கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது.
பெங்களூரு, டி.ஜே.ஹள்ளியின் ஷாம்புராவில் வசிப்பவர் மோகன், 32. இவரது மனைவி ஷோபா, 30. இவர், கடந்த 22ம் தேதி வீட்டின் அருகே உள்ள கடைக்கு பால் வாங்க சென்றார். அப்போது ஷோபாவின் பல் அமைப்பை, மூன்று வாலிபர்கள் கிண்டல் செய்தனர்.
இதுபற்றி கணவர் மோகன், சகோதரர்கள் பிரபு, மதன் ஆகியோரிடம் ஷோபா கூறினார். மூன்று பேரும், வாலிபர்களிடம் சென்று ஷோபாவை கிண்டல் செய்ததை தட்டி கேட்ட போது, வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. வாலிபர்கள் மூவரும், மோகன், பிரபு, மதனை சரமாரியாக தாக்கியதுடன், கத்தியால் உடல்களில் கீறிவிட்டு தப்பினர்.
இதுகுறித்து மோகன் அளித்த புகாரில், டி.ஜே.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தாக்குதல் நடத்திய மூன்று வாலிபர்களையும் தேடி வருகின்றனர்.
