ADDED : மார் 18, 2026 06:13 AM

சிக்கமகளூரு: தோட்டத்தில் பணியாற்றும் போது, தேனீக்கள் கொட்டியதில், 61 வயது விவசாயி உயிரிழந்தார்.
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகாவின் சகராயபட்டணாவை சேர்ந்தவர் கரியா நாயக், 61. தனக்கு சொந்தமான நிலத்தில் தோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை தன் மகன் பிரதீப்புடன் கரியா நாயக் தோட்டத்தில் பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது அருகில் உள்ள மரத்திலிருந்து பறந்து வந்த தேனீக்கள் கூட்டம், கரியா நாயக், பிரதீப்பை கடுமையாக கொட்டின. பிரதீப் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
கரியா நாயக், தேனீக்கள் கொட்டியதில் அங்கேயே மயக்கம் அடைந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த குடும்பத்தினர், அவரை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று முதலுதவி அளித்தனர்.
பின், மேல் சிகிச்சைக்காக சிக்கமகளூரு நகருக்கு அழைத்து செல்ல ஆம்புலன்சில் சென்றனர். செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சகராயபட்டணா போலீசார் விசாரிக்கின்றனர்.
