குடற்புழு நீக்க பிரசாரம்; கோலார் கலெக்டர் துவக்கம்
குடற்புழு நீக்க பிரசாரம்; கோலார் கலெக்டர் துவக்கம்
ADDED : பிப் 11, 2026 09:36 AM
கோலார்: கோலார் மாவட்டத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், ஊட்டச்சத்தை மேம்படுத்தவும், நடத்தப்படும் தேசிய குடற்புழு நீக்க பிரசாரத்தை, மாவட்ட கலெக்டர் எம்.ஆர்.ரவி துவக்கி வைத்தார்.
கோலாரில் நடந்த நிகழ்வில் அவர் பேசியதாவது:
குழந்தைகளுக்கு ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கவும், உடல் மற்றும் மன வளர்ச்சியை ஊக்குவிக்கவும், குடற்புழு நீக்கம் அவசியம். கோலார் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் இத்திட்டத்தின் மூலம் பயனடைய வேண்டும்.
மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அங்கன்வாடிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லுாரிகளில், ஒன்று முதல் 19 வயது வரையிலான 4 லட்சத்து 61 ஆயிரத்து 633 குழந்தைகளுக்கு, குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.
இதற்கான மாத்திரைகள் விநியோகம் தொடங்கி விட்டது. பிப்ரவரி, 16ம் தேதி வரை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாத்திரைகள் அனைத்து சிறுவர்களுக்கும் கிடைக்கும்படி ஊழியர்கள் செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நல அதிகாரி டாக்டர் எம்.ஸ்ரீனிவாஸ், சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
