தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/இயற்கையே ஆரோக்கியம்!

இயற்கையே ஆரோக்கியம்!

இயற்கையே ஆரோக்கியம்!


PUBLISHED ON : செப் 29, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 29, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்.03 - உலக இயற்கை தினம்!

இயற்கையோடு இணைந்து வாழ்வது தான், ஆரோக்கியத்தின் திறவுகோல். எப்போதும், வீடு மற்றும் அலுவலகத்திற்குள் முடங்காமல், இயற்கையை ரசிப்பதற்கும் நேரம் ஒதுக்குங்கள்; அளவற்ற நன்மைகள் கிடைக்கும்.

இயற்கை சூழ்ந்த பூங்காக்களில் நடக்கும் போதோ அல்லது பறவைகளின் இனிய சத்தங்களை கேட்கும் போதோ, மூளையிலுள்ள, பிரிபரல் கார்டெக்ஸ் ஆற்றல், 10 சதவீதம் அதிகரிப்பதாக கூறுகின்றனர், ஆய்வாளர்கள்.

இந்த கார்டெக்ஸ் தான், மூளையின் செயல்களான கவனம், நினைவு, முடிவு எடுக்கும் ஆற்றல் போன்றவைகளில் முக்கிய பங்காற்றுகிறது.

இயற்கை சூழ்ந்த இடங்களில், 15 நிமிடம் நடந்தால், அந்த நபரின் நேர்மறையான சிந்தனை அதிகரித்து, அவரின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை தீர்வு காணும் ஆற்றலும் அதிகரிக்கிறது என்கின்றனர், ஆய்வாளர்கள்.

'மைக்ரோபயாமி' எனும், நம் குடலிலுள்ள டிரில்லியன் கணக்கான நுண்ணியிரிகள் தான், நம் வளர்சிதை மாற்றம், செரிமானம், எடை பராமரிப்பு, நோய் எதிர்ப்பாற்றல், மூளையின் பலம் போன்றவற்றில் முக்கிய பங்காற்றுகிறது. இந்த நுண்ணுயிரிகளின் ஆரோக்கியம், இயற்கையில் விளைந்த காய், கனிகள் உண்பதும், இயற்கை சூழலில் பணியாற்றுவதிலும் தான் உள்ளது.

பொதுவாக இயற்கை காட்சிகளை பார்ப்பது, மனதுக்கு அமைதி அளிக்கும். நிறத்தின் அடிப்படையில் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களே, இதற்கு காரணம். அதனால் தான், நீர் வீழ்ச்சி, பசுமையான வயல்கள், அடர்ந்த செடி, கொடிகள், மரங்கள் மற்றும் புதிதாக துளிர்க்கும் இலைகளை பார்க்கும் போது, நம்முடைய மனதில் ஒருவித பரவசம் உண்டாகிறது.

அதேபோல், மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீள, அடிக்கடி வானத்தை பார்ப்பது ஓர் சிறந்த வழியாகும். இது மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்தம் மற்றும் மன பதற்றத்தை குறைக்க உதவும் என்கின்றனர், அமெரிக்காவின், 'தி கிரேட்டர் குட் சயின்ஸ்' மைய ஆராய்ச்சியாளர்கள்.

வாரம் இருமுறை தோட்ட பணிகளை செய்கிறவர்களுக்கு, குறிப்பாக, பெண்களுக்கு மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு குறைவதாக, புளோரிடா பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மேலும், பசுமை நிறைந்த சுற்றுச்சூழலில் வாழும் பெண்களுக்கு, 'மெனோபாஸ்' காலம், ஓராண்டு தள்ளிப் போகிறது.

இயற்கை சார்ந்த இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து சென்றால், அவர்களது கோபம் குறையும் என்கின்றனர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.

குழந்தைகளிடம் ஏற்படும் மன இறுக்கத்தை தளர்த்த, பசுமை சார்ந்த இடங்கள் உதவுகின்றன. தோட்டம் தொடர்பான செய்முறை பயிற்சிகள், கடினமான நேரத்தை குழந்தைகள் கடந்து வர உதவுகின்றன.

தினமும், 20 நிமிடங்கள், உங்கள் மனம் விரும்பும் இயற்கை சார்ந்த வெளியிடங்களில் அமர்ந்து இருந்தாலோ அல்லது நடைபயின்றாலோ போதும்; உங்கள் மன இறுக்கம் குறையும் என்கின்றனர், அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். இதை அவர்கள், 'இயற்கை மாத்திரை' என்கின்றனர்.

இந்த, 20 நிமிட இயற்கை மாத்திரை, மன அழுத்தத்தை உருவாக்கும், 'கார்டிசால்' எனும் ஹார்மோன் சுரப்பதை குறைக்கிறது என்கின்றனர்.

மேலும், இயற்கை சார்ந்து நீங்கள் இருக்கும், 20 முதல் 30 நிமிடங்கள், உடற்பயிற்சி, மொபைல்போன் பேசுவது, இன்டர்நெட் பார்த்தல், நண்பர்களுடன் பேசுவது போன்றவைகளை கண்டிப்பாக செய்யக் கூடாது என்கின்றனர், ஆய்வாளர்கள்.

கோவீ. ராஜேந்திரன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us