PUBLISHED ON : மார் 29, 2026

அன்பு சகோதரிக்கு -
நான், 62 வயது ஆண். தனியார் நிறுவனம் ஒன்றில், 'ஸ்டோர் கீப்பர்' ஆக இருந்து, ஓய்வு பெற்றவன். எனக்கு மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். எனக்கு எந்த கெட்டப்பழக்கமும் இல்லை.
மூத்த மகனுக்கு வயது, 26. முதுகலை பட்டம் படித்துள்ளான். வேலை தேடிக்கொண்டுள்ளான். இளையவன் வயது, 24. 'டி.பார்ம்' படிப்பு படித்து வருகிறான்.
சிறுவயதிலிருந்தே நான் ஒரு லட்சியம் வைத்திருந்தேன். திருமணம் செய்வதாக இருந்தால், கணவனை இழந்த ஒரு பெண்ணை தான் திருமணம் செய்வது என்று. அதன்படி, என் பெற்றோரின் எதிர்ப்பை மீறி, கணவனை இழந்த ஒரு பெண்ணை தான் திருமணம் செய்தேன்.
ஆரம்பத்தில், மற்ற பெண்களைப் போல் தான், வீட்டு பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு என்று இருந்தாள், என் மனைவி. மகன்கள் ஓரளவு வளர்ந்த பின், அவளது போக்கில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. எதற்கெடுத்தாலும் எதிர்த்து பேசுவதோடு, மகன்கள் முன், என்னை, 'வாடா, போடா' என்று ஏசுவாள்.
நானும் பொறுமையாக இருப்பேன். மகன்கள், நல்ல நிலைமைக்கு வரும் வரை அவளது, 'டார்ச்சரை' தாங்கிக் கொள்ள முடிவெடுத்துள்ளேன்.
நான் பணி ஓய்வு பெற்றதிலிருந்து, என்னை வீட்டை விட்டு துரத்துவதிலேயே குறியாக இருக்கிறாள். சமயத்தில், 'ஹிஸ்டீரியா' நோயாளி போல் கத்த ஆரம்பித்து விடுவாள். இம்மாதிரியான நேரங்களில் என் மகன்கள் வீட்டிலிருந்து வெளியேறி விடுவர்.
அவர்களது எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. மருத்துவமனைக்கு அழைத்தாலும் வர மறுக்கிறாள்.
என் பெற்றோர் தனியாக வசிக்கின்றனர். அவர்களது ஆதரவும் இல்லை. மனைவிக்கு ஒரு அக்கா மட்டும் தான். அவள் கணவர் தான் என் மனைவிக்கு ஏதோ, துர்போதனை செய்து வருகிறார். அடிக்கடி, அக்காவை பார்க்க போகிறேன் என்று கூறி செல்வாள். திரும்பி வரும்போது, ராட்சசியாக மாறி, என்னை வறுத்தெடுப்பாள்.
இதிலிருந்து விடுபடுவது எப்படி சகோதரி.
- இப்படிக்கு,
உங்கள் சகோதரன்.
அன்பு சகோதரருக்கு -
என்னை மன்னித்துக் கொள்ளுங்கள், சகோதரரே... உங்களின் மோசமான நடவடிக்கைகள் தான், உங்கள் மனைவியை கரடுமுரடான பெண்ணாக மாற்றியிருக்கிறது என்று எண்ணுகிறேன்.
உறவினர்கள் துர்போதனை எல்லா குடும்பங்களிலும் நடக்கிறது. புலம்பிக் கொண்டே இருப்பதில், ஒரு பலனும் இல்லை. கோள் சொல்லும் உறவினர்களை நைச்சியமாக கையாள வேண்டும்.
கணவர்களை பல பெண்கள் தனிமையில் கொஞ்சலாக, 'வாடா, போடா...' என, அழைப்பர். இது ஒரு வகை, 'ரொமான்ஸ்!' பொதுவெளியில், 'வாடா, போடா...' என, அழைப்பது நெருடலான விஷயம்.
உங்கள் மனைவியை, ஓர் இனிய வாழ்க்கைத் துணையாக பாவிக்காமல், சம்பளம் இல்லாத வேலைக்காரியாய் பாவித்துள்ளீர்களோ என்று கருதுகிறேன்.
தவிர, உங்கள் மனைவி, முதல் திருமணத்தில் பல கசப்பான அனுபவங்களை பெற்றிருக்கலாம். அதன் தொடர்ச்சி தான், உங்கள் மனைவியின் துர்நடத்தை.
பணி ஓய்வுக்கு பின், உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கிறதா? உங்கள் நிறுவனம் ஓய்வூதியம் வழங்காமல், சிறுபணி கொடை கொடுத்து உங்களை வீட்டுக்கு அனுப்பி இருக்கின்றனர் என, யூகிக்கிறேன். புதிதாக ஏதாவது ஒரு வேலையை தேடிக்கொள்ளச் சொல்லி, உங்கள் மனைவி உங்களை விரட்டுகிறாள் போலும். பணி ஓய்வுக்கு பிறகு, முழு ஆரோக்கியமாய் இருக்கிறீர்கள் என்றால், ஏதாவது ஒரு வேலைக்கு போகலாமே! அதன் மூலம் தினம் எட்டுமணி நேரம் வீட்டுக்குள் இருந்து, மனைவியுடன் போராடாமல், நீங்களும், உங்கள் மனைவியும் நிம்மதி பெறலாம். மகன்கள் தேனாய் இனிப்பரே!
இரு மகன்களில் ஒருவன், உங்கள் மனைவிக்கு செல்லமாக இருப்பான். அவனை விட்டு உங்கள் மனைவியின் விருப்பங்களை கேட்டறியலாம். குற்றம் சாட்டும் விதத்தில் கேட்காமல், அக்கறை உணர்வுடன் கேட்டால், உங்கள் மனைவி, தன் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டி விடுவாள்.
மனைவி மீது குற்றப்பத்திரிகை வாசிக்காமல் அன்பைக் கொட்டுங்கள். உங்கள் மனைவி, அவரது அக்காவின் வீட்டுக்கு செல்லும் சந்தர்ப்பங்களை குறையுங்கள். கணவனை இழந்த பெண்ணை மறுமணம் புரிந்து, பெரிய தியாகம் செய்து விட்டேன் என, ஒரு போதும் மார்தட்டிக் கொள்ளாதீர்கள். புதிய வேலையின் முதல் மாத சம்பளத்தை மனைவியிடம் அளியுங்கள்.
மூத்தவனுக்கு வேலை கிடைத்ததும் வரன் பாருங்கள். வாரம் ஒரு முறை உங்கள் மனைவியை இருவரில் ஒரு மகன் கோவிலுக்கு அழைத்துச் செல்லட்டும். வாரத்தில் ஒரு நாள் வீட்டை சமையல் இல்லாத நாளாக அறிவியுங்கள். உடல் மற்றும் மனபிரச்னை எதாவது உங்கள் மனைவிக்கு இருந்தால், தகுந்த சிகிச்சையளியுங்கள். காட்டு யானையின் காலில் தைத்த முள்ளை அகற்றும் யானைப்பாகனின் சிரத்தை உங்களிடம் வெளிப்பட வேண்டும். உங்கள் கரிசனம் கண்டு, உங்கள் மனைவி முழுமையாக ஒத்துழைப்பார்.
வெறுப்பை, கூடுதல் அன்பால் வெல்லலாம் சகோதரரே!
- என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

