PUBLISHED ON : மார் 22, 2026

அன்புள்ள அம்மாவுக்கு -
நான், 24 வயது பெண். பிளஸ்2 முடித்து, தபாலில், பட்டப்படிப்பு படித்து வருகிறேன். எனக்கு அம்மா மட்டும் தான். அப்பா இறந்து விட்டார். டாக்டர் ஒருவர் வீட்டில் சமையல் வேலை செய்து வருகிறார், அம்மா. எனக்கு உடன் பிறந்தவர்கள் யாருமில்லை.
நான், பிளஸ்2 முடித்ததுமே, 'ஸ்டேஷனரி' கடை ஒன்றில் பணியில் சேர்ந்தேன். அக்கடையில் பணிபுரிந்த ஒருவனுக்கும், எனக்கும் காதல் ஏற்பட்டது. இரண்டு ஆண்டு காதல், வீட்டுக்கு தெரிய வர, என்னை வேலையிலிருந்து நிறுத்தி விட்டாள், அம்மா.
அவன் கொடுத்த தைரியத்தில், ஒருநாள், தாயை தவிக்கவிட்டு, அவனை கோவிலில் திருமணம் செய்து கொண்டேன். அவனுக்கு ஒரு தம்பியும், அம்மாவும் உண்டு.
அவர்களுக்கும் இத்திருமணத்தில் விருப்பமில்லை. கணவரின் தம்பி சொந்தமாக, 'எலக்ட்ரிக்கல்' பொருட்கள் விற்கும் கடை வைத்திருக்கிறான்.
திருமணமானது முதல், என் கணவன் என்னை சந்தேகப்பட ஆரம்பித்து விட்டான். தினமும் சண்டையும், சச்சரவுமாக இருந்தது. எதிர்த்து கேட்ட அவன் அம்மாவையும், தம்பியையும் அடிக்க போக, அவர்கள் கோபித்துக்கொண்டு, வேறு வாடகை வீட்டுக்கு சென்று விட்டனர்.
தினமும் இவனது, 'டார்ச்சர்' ஆரம்பமானது. ஜோதிடத்தில் அதிக நம்பிக்கையுள்ள இவன் எதற்கெடுத்தாலும் ஜோசியம் பார்க்க ஆரம்பித்தான். இரவு முழுவதும் விழித்திருந்து என்னை கண்காணித்து கொண்டிருப்பான்.
இந்நிலையில், நான் கர்ப்பமானேன். என் கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று ஜோசியம் பார்த்தான். 'கருவை கலைத்து விடு...' என்றான். அவனது அம்மாவும், என் அம்மாவும் கருவை கலைக்கக்கூடாது என்று கூறி விட்டனர்.
என்னை பயமுறுத்துவதற்காக, தன் மீது பெட்ரோல் ஊற்றி, தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டினான். மற்றொரு நாள் அவன் விஷம் குடித்துவிட, 'சீரியஸ்' ஆகி, மருத்துவமனையில் சேர்த்தேன். ஆனாலும், காப்பாற்ற முடியவில்லை.
ஆறு மாத திருமண வாழ்வு முடிந்து விட்டது. 'கருவை கலைத்து விடு. கொஞ்ச நாட்களுக்கு பின் வேறு திருமணம் செய்து வைக்கிறேன்...' என்கிறாள், அம்மா.
அதே போல் செய்து, இப்போது அம்மாவுடன் தங்கியுள்ளேன். தபால் மூலம் பட்டப்படிப்பு படித்து வருகிறேன்.
ஆனால், எனக்கு எதிலும் பிடிப்பு ஏற்படவில்லை. என்னால், அம்மாவுக்கு தீராத பழியை ஏற்படுத்தி விட்டேன் என்ற குற்ற உணர்ச்சி என்னை பாடாய் படுத்துகிறது. நான் என்ன செய்யட்டும் அம்மா.
இப்படிக்கு, உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு -
உன் விடலை காதல், ஆறு மாதங்கள் நடந்த ஒரு துன்பியல் கனவு.
ஒரு தவறான ஆணை காதலித்து, ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டால், ஒரு பெண்ணுக்கு என்னென்ன அவலங்கள் நடக்கும் என்பதற்கு உன் வாழ்க்கை ஓர் உதாரணம்.
ஒரு கெட்டவனால் ஒரு பெண் கர்ப்பமுற்றால் 'சென்டிமென்ட்' மனோபாவம் கொண்டு கர்ப்பத்தை கலைக்க, பாதிக்கப்பட்ட பல பெண்கள் ஒப்புக்கொள்வதில்லை. கருவை கலைக்க சொன்ன உன் அம்மாவுக்கும் அம்மாவின் பேச்சைக் கேட்டு, கர்ப்பத்தை கலைத்த உனக்கும் ஒரு, 'ராயல் சல்யூட்!'
ஆறு மாத சித்தரவதையில் நல்லதொரு பாடத்தை கற்றுக்கொண்டுள்ளாய். உன் வாழ்க்கையை மூன்று பாகங்களாக பிரிக்கலாம். முதல் பாகத்தில் அறியாமையால், காதலில் விழுந்து சீரழிந்தாய்.
இரண்டாவது பாகம், படிப்பு, மறுமணம், நிம்மதியான திருமணவாழ்க்கை.
மூன்றாவது பாகம், பேரன், பேத்திகளுடன் கொஞ்சி விளையாடும் வயோதிக வாழ்க்கை.
உன் கணவன்தான் கொடூரன். அவனின் தாயாரும், தம்பியும் உன் அபிமானிகள். அவர்களுடன் எப்போதுமே அன்பு பாராட்டு. தப்பித்தவறி கொழுந்தன் மீது காதல் கொண்டு விடாதே.
தபாலில் இளங்கலை, முதுகலை, இளம்முனைவர், முதுமுனைவர் பட்டங்கள் பெற்று, யு.ஜி.சி., நெட் தேர்ச்சி பெற்று, ஏதேனும் ஒரு கல்லூரியில் விரிவுரையாளர் பணியில் சேர். மேற்சொன்ன பட்டங்கள் படித்து முடிக்க, பத்து ஆண்டுகள் ஆகலாம். உன், 34 அல்லது 35வது வயதில் விரிவுரையாளர் ஆவாய். முதல் மாத சம்பாத்தியத்தை அம்மாவின் காலடியில் வை. காலம் பூராவும் சமையல் வேலை செய்த அம்மாவை சுகவாழ்வு வாழச்செய்.
கடின உழைப்பும், இறை அனுக்கிரகமும் சேர்ந்தால், வானமும் தொட்டு விடும் துாரம் தான்.
ஒவ்வொரு துன்பத்தின் பின்னும், இன்பம் ஒளிந்திருக்கும்.
மறுமணம் செய்யும்போது வரனை தேர்ந்தெடுப்பதில் மகாகவனம் தேவை. நீ திருமண வாழ்வில் வெற்றி பெற்றால் அம்மாவின் மீதான தீராப்பழி நிரந்தரமாய் அகன்று விடும்.
வேலையில் சேருவதற்கு மற்றும் மறுமணம் செய்வதற்கு முன் நீயும், உன் அம்மாவும் ராமேஸ்வரம் சென்று, 22 தீர்த்தங்களில் நீராடி வாருங்கள்.
நாளை நமதே மகளே.
என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

