PUBLISHED ON : மே 31, 2025

மதுரை நகரில் பழமையான கேப்ரன் ஹால் உயர்நிலைப் பள்ளியில், 1969ல், 11ம் வகுப்பு படித்தேன்.
தமிழாசிரியையாக இருந்த பொண்ணுசாமிக்கு கணீர் குரல். அவர் பாடம் நடத்தும் போது மற்ற வகுப்பறைகளிலும் அவரின் குரல் எதிரொலிக்கும். ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் தனித்தனியாக வாசிப்பு பயிற்சி தருவார். தமிழ் சொற்களை தெளிவாக உச்சரிக்கவும், சொற்றொடர்களை புரிந்து கொள்ளவும் இது உதவியது. எழுதும் போது அருகில் நின்றபடி கண்காணிப்பார். தவறு கண்டால் உடனே திருத்துவார்.
அன்று அரையாண்டு தேர்வு எழுதிக்கொண்டிருந்தேன். அருகே வந்தவர், 'பதட்டப்படாதே... தெளிவாக எழுது... நல்ல மதிப்பெண்கள் பெறலாம்...' என அறிவுரைத்தார். அதன்படி முயற்சி செய்து பள்ளி அளவில் முதன்மை மதிப்பெண் பெற்றேன்.
தற்போது என் வயது, 72; இல்லத்தரசியாக இருக்கிறேன். தமிழ் மொழியை பிழையின்றி எழுத, படிக்க கற்றுத் தந்து அறிவூட்டிய ஆசிரியை பொண்ணுசாமியை போற்றி வாழ்கிறேன்.
- சி.சுபா, சென்னை.
