PUBLISHED ON : மார் 19, 2026 07:17 AM

1. இடி, மின்னலின் போது, சிலவகை மரங்கள் மெல்லிய புற ஊதா ஒளியை உமிழக்கூடும் என விஞ்ஞானிகள் முதன்முதலாகக் கண்டறிந்துள்ளனர்.இலை நுனிகளில் ஏற்படும் மின்சார வெளியேற்றமே இதற்குத் துாண்டுகோல். மின்னுாட்டம் பெற்ற மேகங்களின் கீழ் காடுகள் தற்காலிகமாக ஒளி வீசும் விந்தையை இது விளக்குகிறது.
![]() |
2. 'பம்பிள் பீ' எனப்படும் தேனீ இனத்தின், ராணித் தேனீ, நீருக்கடியில் பல நாட்கள் உயிர்வாழும் விந்தையை ஒட்டாவா பல்கலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வளர்சிதை மாற்றத்தைக் குறைத்து, நீரிலிருந்தே ஆக்சிஜனைப் பெறும் திறன் ராணித் தேனீக்கு உள்ளது. இதனால், வெள்ளப்பெருக்கு காலங்களில் பம்பிள் பீ தேனீ இனம் அழியாமல் தப்பிக்கிறது.
![]() |
3. பூனைகள் மேலிருந்து தலைகீழாக விழுந்தாலும், அந்தரத்திலயே சுழன்று சரியாகத் தரையிறங்கும். அதற்குக் காரணம் பூனைகளின் தனித்துவமான முதுகுத்தண்டு அமைப்பே என ஜப்பானின் யமகுச்சி பல்கலை ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. முன்புற முதுகுத்தண்டு, பின்புறத்தை விட எளிதாகத் திரும்புவதால் இது சாத்தியமாகிறது.
![]() |
4. கேமிங், ஸ்ட்ரீமிங் மற்றும் சமூக வலைதளங்களை ஒரே டிஜிட்டல் உலகமாக இணைக்கிறது 'கேம்ர்' ( GAMR). இந்தக் கருவியை கைகளுக்குப் பதில், கால்களாலேயே இயக்கி விளையாட முடியும். விளையாட்டை தனிமையில், உட்கார்ந்து ஆடாமல், உடல்ரீதியாகவும் மற்றவர்களோடும் இணைந்து விளையாட உதவுகிறது இந்த தொழில்நுட்பம்.
![]() |
5. 'லேம்ப்ரே' மீனின் வாய் அமைப்பை முன்மாதிரியாகக் கொண்டு ஒரு புதிய உறிஞ்சும் கருவியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். கரடுமுரடான பரப்புகளையும் பலமாகப் பிடிக்கும் இக்கருவி, பல மடங்கு எடையைத் துாக்கும் திறன் கொண்டது. இது ரோபாட்டிக்ஸ் மற்றும் அறுவை சிகிச்சை சாதனங்களில் பயன்படும்.





