PUBLISHED ON : ஏப் 11, 2024 12:00 AM

மனித மூளை காலம்தோறும் மாறிவருகிறது. 1930களுக்குப் பிறகு, மனித மூளை வளர்ந்துள்ளது என்பது விஞ்ஞான உண்மை. இதற்கும் அல்சைமர் நோய்க்குமான தொடர்பு இருப்பதைச் சமீபத்திய ஆய்வு கண்டுபிடித்துள்ளது.
2020ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகம் முழுதும் 5 கோடி மக்கள் 'டிமென்சியா' எனும் மறதி சார்ந்த மூளை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த 20 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான காரணம் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதே ஆகும்.
அதாவது கடந்த காலங்களை விடச் சராசரி மனித ஆயுள் அதிகரித்துள்ளது. 2016ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 1970களுக்குப் பிறகு புதிதாக நினைவாற்றல் தொடர்பான 'டிமென்சியா' நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது, அதுவும் பத்தாண்டுகளுக்கு 20 சதவீதம் என்ற அளவில் குறைந்து வருவது தெரியவந்துள்ளது. ஆகவே, இப்போது இருப்பவர்கள் பெரும்பாலும் பழைய நோயாளிகள் தான்.
இவ்வாறு குறைவதற்கான முக்கியக் காரணம் 1930களுக்குப் பிறகு மனித மூளையின் கொள்ளளவு அதிகரித்தது தான் என்கின்றனர் விஞ்ஞானிகள். 1930, 1970 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பிறந்த 15,000 பேரின் மூளையை எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்து இதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
பொதுவாக, மூளையின் அளவு என்பது மரபியல் சார்ந்தது தான் என்றாலும் கல்வி, சமூக, உடல் ஆரோக்கியம் முதலியவையும் குறிப்பிட்ட அளவு தாக்கம் செலுத்தும் என்கின்றனர் மருத்துவ விஞ்ஞானிகள்.
மூளையின் அளவு அதிகரிப்பதால், நினைவுகளுக்கு அதிக இடம் கிடைக்கிறது.
இதுவே நினைவுக் குறைபாடு நோய்கள் குறைந்து வருவதற்குக் காரணம் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

