/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
இரண்டு கருந்துளைகள் இணைய முடியுமா?
/
இரண்டு கருந்துளைகள் இணைய முடியுமா?
PUBLISHED ON : டிச 11, 2025 07:27 AM

வானியலாளர்கள் ஒரு சிக்கலான அண்டவெளிப் புதிரை தற்போது விடுவித்துள்ளனர். அண்மையில் இரு பெரும் கருந்துளைகள் இணைந்தன. இந்த நிகழ்வுக்கு, 'ஜிடபிள்யு231123' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதை ஈர்ப்பு அலைகளை அளக்கும் உணரிகள் மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். சூரியனைப் போல 100 முதல் 140 மடங்கு எடையுள்ள இரு ராட்சத கருந்துளைகள் இணைந்தது, இதுவரை உள்ள இயற்பியல் விதிகளின்படி சாத்தியமற்றது. ஏனெனில், இவ்வளவு எடையுள்ள விண்மீன்கள் அழியும்போது முழுமையாக வெடித்துச் சிதறுமே தவிர, கருந்துளையாக எஞ்சாது. இதை 'நிறை இடைவெளி' (Mass Gap) என்று அழைப்பர்.
ஆனால், இதற்கான தரவுகளை சூப்பர் கம்ப்யூட்டரில் செலுத்தி செய்த ஆய்வுகள் இதற்கு சரியான விடை கொடுத்துள்ளன. மிக வேகமாகச் சுழலும் ஒரு ராட்சத விண்மீன் அழியும்போது, அதன் மையத்திலுள்ள காந்தப்புலங்கள் விண்மீனின் எடையில் பாதியை வெளியேற்றி விடுகின்றன.
இதனால், முழு வெடிப்பைத் தவிர்த்துவிட்டு ஒரு கருந்துளை உருவாவது சாத்தியமாகிறது. இத்தகைய விதிவிலக்கான இரு கருந்துளைகள் இணைந்ததையே, ஈர்ப்பு அலை உணரிகள் அண்மையில் பதிவு செய்துள்ளன.
வருங்காலத்தில், ஈர்ப்பு அலை மற்றும் காமா கதிர் ஆய்வுகள் இந்தக் கோட்பாட்டை உறுதிப்படுத்தினால், பிரபஞ்சத்தின் பெரும்பாலான பொருட்கள் உருவான விதம் குறித்த நம் புரிதல் தலைகீழாக மாறும்.
விண்வெளி அறிவியலில் இதுவரை விலக்கப்பட்டவை என்று கருதப்பட்ட நிகழ்வுகள், உண்மையில் இயற்கையில் 'அரிதானவை' மட்டுமே என இது நிரூபிக்கக்கூடும். அப்படி நிரூபிக்கப் பட்டால், அது விண்ணியற்பியலின் விதிகளை மாற்றி எழுதும்.

