/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
லஞ்ச பொறியாளரை காப்பாற்றிய அதிகாரிகள்!
/
லஞ்ச பொறியாளரை காப்பாற்றிய அதிகாரிகள்!
PUBLISHED ON : அக் 08, 2024 12:00 AM

''பா.ஜ., மாநில நிர்வாகியின் உயிருக்கு ஆபத்துன்னு எச்சரிக்கைவிடுத்திருக்காங்க வே...''என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''விளக்கமா சொல்லுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''கோவையை சேர்ந்த, பா.ஜ., மாநில பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள்ல இருக்கிற குறிப்பிட்ட மதவாத கட்சியை தடை செய்யக் கோரி, பல போராட்டங்களை நடத்தினாரு... இதனால, 'அவரது உயிருக்கு ஆபத்து இருக்கு'ன்னு சொல்லி, தமிழக போலீஸ் பாதுகாப்பு குடுத்திருக்காவ வே...
''இந்த சூழல்ல, வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கம் வழியா, இந்தியாவுக்குள் ஊடுருவிய சில வாலிபர்களை, போலீசார் சமீபத்துல கைது பண்ணி விசாரணைநடத்தியிருக்காவ... அவங்க தந்த தகவல்படி, 'எதுக்கும் உஷாரா இருங்க'ன்னு முருகானந்தத்துக்கு மத்திய உளவுத்துறையிலஇருந்து எச்சரிக்கை தகவல் வந்திருக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.
''மேய்ச்சல் நிலத்தை, 'ஆட்டைய' போட்டுட்டாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறிய அன்வர்பாயே தொடர்ந்தார்...
''துாத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகா, தென்னம்பட்டிகிராமத்தில், 25 ஏக்கர் நிலத்தை கால்நடைகளின்மேய்ச்சலுக்காக ஒதுக்கிஇருந்தாங்க... இப்ப, அந்த இடத்துல தென்னந்தோப்பு அமைச்சு, சுற்றியும் வேலியும் போட்டுட்டாங்க பா...
''இது பத்தி, கோவில்பட்டி வருவாய் அதிகாரியிடம் விவசாயிகள் புகார் தெரிவிச்சிருக்காங்க... ஆனா, எந்த நடவடிக்கையும் இல்ல பா...
''விசாரிச்சப்ப, ஒட்டப்பிடாரம் தொகுதி ஆளுங்கட்சி முக்கிய புள்ளியும், அவரது சகோதரர் குடும்பத்தினரும்நிலத்தை அபகரித்து, அவங்க பெயருக்கு ஆவணங்களை மாத்திட்டது தெரிய வந்துச்சு...இதனால தான், நடவடிக்கை எடுக்க முடியாம கால்நடைமற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கையை பிசைஞ்சிட்டு இருக்காங்க பா...
''இதனால, 'இந்த விவகாரத்தை தோண்டி துருவினா, இந்த மாதிரி இன்னும் நிறைய ஆக்கிரமிப்பு விவகாரம் அம்பலத்துக்கு வரும்'னு விவசாயிகள் சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''எப்.ஐ.ஆர்., போட்டும், நடவடிக்கை இல்லை ஓய்...'' என, கடைசி தகவலுக்கு கட்டியம் கூறினார், குப்பண்ணா.
''யார் மேல எப்.ஐ.ஆர்.,போட்டுருக்காங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''கோவை மாநகராட்சியில், இளநிலை பொறியாளரா பணியாற்றிய அதிகாரியிடம் கணக்கில்வராத பணம், 1 லட்சத்து,2,000 ரூபாயை சமீபத்துல லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தா... இது சம்பந்தமா, பணம் குடுத்தவரிடம் வாக்குமூலமும் வாங்கி, எப்.ஐ.ஆரும் பதிவு பண்ணிட்டா ஓய்...
''வழக்கமா அரசு அதிகாரி மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்தாலே, துறை ரீதியா நடவடிக்கை எடுக்கறது வழக்கம்... இந்த வாக்குமூலத்துல, யார் யாரிடம் எவ்வளவு பணம் குடுத்தேன்னு சம்பந்தப்பட்டவரே தெளிவா சொல்லிஇருக்கார் ஓய்...
''அப்படி இருந்தும், 'லஞ்ச ஒழிப்பு துறையில்இருந்து இன்னும் ஸ்டேட்மென்ட் வரல'ன்னு சொல்லி, பொறியாளர் மீது மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கல... அதுவும் இல்லாம, பொறியாளரும் சத்தமில்லாம கடலுார் மாநகராட்சிக்கு இடம் மாறி போயிட்டார் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

