PUBLISHED ON : ஜூன் 03, 2026 12:21 AM

பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வரும், திண்டுக்கல் மாவட்டம், பெத்தநாயக்கன்பட்டியைச் சேர்ந்த, 45 வயதாகும் முனைவர் ராஜேஷ்குமார்:
நாங்கள் விவசாய குடும்பம். அப்பா தான் விவசாயம் செய்து வந்தார். நான், இணைய பாதுகாப்பு துறையில் முனைவர் பட்டம் பெற்று, கல்லுாரியில் பேராசிரியராக வேலை பார்த்தேன். 2020ல் பேராசிரியர் பணியை விட்டுவிட்டு, முழு நேரமாக விவசாயத்தில் ஈடுபட முடிவு செய்தேன்.
எங்கள் குடும்ப சொத்தான, 22 ஏக்கர் நிலத்தில், 12 ஏக்கரை என் பொறுப்பில் அப்பா ஒப்படைத்தார். மழைநீர் சேகரிப்பிற்காக, ஒரு ஏக்கரில் குளம் அமைத்து மீன்கள் வளர்த்து வருகிறேன். இயற்கை இடுபொருள் தேவைக்காக இரண்டு நாட்டு மாடுகள், பால் விற்பனைக்காக நான்கு எருமை மாடுகள் வளர்க்கிறேன்.
ஒரு ஏக்கரில் மாட்டுக்கொட்டகை, மேய்ச்சல் திடல் இருக்கிறது. மீதி, 10 ஏக்கரில் ஆண்டுக்கு இருபோகம் என, பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்கிறேன்.
தலா 6 ஏக்கரில் சம்பா மற்றும் குறுவை பட்டங்களிலும் ஒரே அளவு விளைச்சல் கிடைக்கிறது. ஒரு ஏக்கருக்கு சராசரியாக, 1,200 கிலோ நெல் மகசூல் கிடைக்கிறது. இதை கைக்குத்தல் அரிசியாக மதிப்பு கூட்டினால், 700 கிலோ அரிசி கிடைக்கிறது. சராசரியாக ஒரு கிலோவுக்கு, 140 ரூபாய் விலை கிடைக்கும்.
மொத்தம், 700 கிலோ அரிசி விற்பனை வாயிலாக, செலவு போக ஒரு ஏக்கருக்கு, 55,000 ரூபாய் லாபம் கிடைத்து வருகிறது. 6 ஏக்கருக்கு , 3.30 லட்சம் ரூபாய் வீதம், ஓராண்டில் இருபோகம் நெல் சாகுபடி வாயிலாக, 6.60 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்து வருகிறது. 'பருக்கை இயற்கை அங்காடி' என்ற பெயரில், அரிசியை விற்பனை செய்து வருகிறேன்.
நெல் சாகுபடி வாயிலாக கிடைக்கும் வைக்கோலை மாடுகளுக்கும், அரிசியாக அரைக்கும்போது கிடைக்கும் உமியை மீன்களுக்கும் தீவனமாக பயன்படுத்துகிறேன். நான்கு எருமை மாடுகள் வாயிலாக தினமும், 12 லிட்டர் பால் கிடைக்கிறது. ஒரு லிட்டர், 40 ரூபாய் என்று விற்பனை செய்வதன் வாயிலாக, ஆண்டுக்கு, 1 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.
குளத்தில், 2,500 மீன் குஞ்சுகள் விடுவேன். ஓராண்டு வரை அவற்றை வளர்த்து, விற்பனை செய்வேன். குறைந்தபட்சம், 1,200 கிலோ மீன்கள் கிடைக்கும். உயிருள்ள மீனை, கிலோ, 180 ரூபாய் என்று விற்பனை செய்கிறேன். அதில், 1.50 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கிறது.
ஆக, அரிசி, பால் மற்றும் மீன் விற்பனை வாயிலாக ஆண்டுக்கு, 9.10 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைத்து வருகிறது.
தொடர்புக்கு: 98438 44844.
