PUBLISHED ON : மார் 18, 2026 02:15 AM

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேட்டி: கர்நாடக அரசு, 16 வயது
குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளது; ஆந்திர அரசும்
தடை விதித்துள்ளது. ஆனால், தமிழக முதல்வரோ, படிக்க வேண்டிய குழந்தைகளை
அழைத்து, 'ரீல்ஸ்' போடுகிறார். அவரது கவனம், சட்டம் - ஒழுங்கை
பாதுகாப்பதிலோ, மக்கள் நலனிலோ இல்லை. தி.மு.க., தலைவர்கள், இப்போதே
ஜெயித்து விட்டதாக செயல்படுகின்றனர். இதுதான் அவர்களின் அழிவுக்கு
அஸ்திவாரம். 'அதீத தன்னம்பிக்கை, அதல பாதாளத்துல தள்ளிடும்'னு சொல்ல
வர்றாரோ?
தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'நான் நடத்தி வைக்கும் ஒவ்வொரு திருமணத்திலும், உங்கள் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள் என, மணமக்களிடம் கோரிக்கை வைப்பேன்' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். உங்கள் பெயரை தமிழில் வைக்காதது உங்கள் தவறில்லை. ஆனால், உங்கள் மகனுக்கு தமிழில் பெயர் வைக்காமல், 'உதயநிதி' என்ற சமஸ்கிருத பெயரை வைத்தது ஏனோ?
அவங்க கட்சியின் சின்னமான உதயசூரியன் மற்றும் தன் தந்தை கருணாநிதியின் கடைசி எழுத்துகளை சேர்த்து வச்சுட்டதால, தமிழ் பெயரை கவனிக்க மறந்திருப்பார்! தமிழக கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி பேட்டி: காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு, ஈரான் -- இஸ்ரேல் போர் மட்டும் காரணம் என்பது சரியல்ல. இது, முழுக்க முழுக்க மத்திய பா.ஜ., அரசின் வெளியுறவு கொள்கை தோல்வியால் ஏற்பட்டுள்ள விளைவு. மத்திய அரசு முன்கூட்டியே கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு போன்றவற்றை போதுமான அளவில் இறக்குமதி செய்து கையிருப்பு வைத்திருந்திருக்கலாம்; ஆனால், மத்திய அரசு திட்டமிடவில்லை. அதனால் தான், இன்று காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அது சரி... அமெரிக்க அதிபர் டிரம்ப், 'ஈரான் மீது போர் தொடுக்க போறேன்'னு இந்தியாவிடம் முன் கூட்டியே சொன்னது போலவும், அப்படியிருந்தும் மத்திய அரசு அசால்டா இருந்துட்டது மாதிரியும் பேசுறாரே!
தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: படைத் தளபதிகளை சரியாக தேர்வு செய்திருக்கும் மன்னன், போர்க் களத்திற்கே வர வேண்டிய அவசியம் இருக்காது. நேரடியாக பட்டாபிஷேகத்திற்கு வந்தால் போதும் என்ற நிலை, அங்கு உருவாக்கப்பட்டு விடும். சிங்கத்தின் தலைமையில் பூனைகளும் வென்று விடும்; பூனையின் தலைமையில் சிங்கமும் தோற்று விடும். எதற்கும் தலைமை என்பதே தலையாயதாகும். அப்படிப்பட்ட தலைமைக்கான சகல அம்சங்களோடு ஸ்டாலின் மட்டுமே உள்ளார்.
அப்படி என்றால், முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்துக்கே போகாமல் ஜெயித்து காட்டுவாரா?

