PUBLISHED ON : அக் 12, 2024 12:00 AM

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி., கார்த்தி பேட்டி: சென்னை
மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் நடக்கவில்லை.
ஆனால், மற்ற ஏற்பாடுகளை செம்மையாக செய்திருந்தால் ஐந்து உயிர் இழப்புகளை
தவிர்த்திருக்கலாம். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய்
போதாது; இன்னும் அதிகம் கொடுக்க வேண்டும். வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை
வழங்க வேண்டும்.
கொரோனா பணியின்போது உயிரிழந்த டாக்டரின் மனைவிக்கே இன்னும் அரசு பணி தரலையே!
தமிழக பா.ஜ., மூத்த தலைவரும், நடிகருமான சரத்குமார் அறிக்கை: 'உள் இட ஒதுக்கீடு, பட்டியல் சமூகத்தை பல குழுக்களாக பிரிக்கும்' என திருமாவளவன் தெரிவித்துஇருக்கிறார். பட்டியலின மக்களிடையே இருக்கும் சில பிரிவினைகளை களைந்து, அவர்களை ஒன்றுபட செய்திருக்க வேண்டியது தலைவர்களின் கடமை. அதை விடுத்து, உள் இட ஒதுக்கீடுகள் பிரிவினைகளை வளர்க்கும் என தெரிவித்தால், சமூகத்தில் ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடுகளும் பிரிவினைகளை வளர்க்கத் தான் என்று கூற முடியுமா?
நியாயமான கேள்வி தான்... இதற்கு பதில் தருவது, திருமாவளவனுக்கு கொஞ்சம் சிரமம் தான்!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: இரு கல்லுாரி மாணவர்களுக்கிடையே நடந்த மோதலில், மாநிலக் கல்லுாரி மாணவர் உயிரிழந்தது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. இதில், யாரை குறை சொல்வது? அரசியல் அழுத்தங்களின் காரணமாக கடும் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை என்ற நியாயமான, உண்மையான காரணத்தை ஏற்றுக் கொள்ளாமல், காவல் துறையை குறை சொல்வதா?
யாரை குறை சொல்லியும் பயன் இல்லை... தங்களது பிள்ளைகளை வம்பு, தும்புகளில் கலந்துக்காம வளர்ப்பதில் பெற்றோர் தான் அக்கறை காட்டணும்!
ம.தி.மு.க., முதன்மை செயலர் துரை வைகோ அறிக்கை: டில்லியில் ராகுலை சந்தித்த போது, காஷ்மீரில் வெற்றிக்கனியை பறித்ததற்கு வாழ்த்தினேன். தமிழக அரசியல் நிலைமை, திராவிட இயக்க அரசியல் பற்றி எல்லாம் நிறைய கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார். மக்கள் ஆதரவுடன் ராகுல் தலைமையில் இந்தியாவில் நல்லாட்சி அமையும் காலம் வரும் என, வாழ்த்தினேன்.
பதிலுக்கு, 'உங்க தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையணும்'னு அவர் வாழ்த்து சொல்லலையா?

