PUBLISHED ON : ஏப் 17, 2024 12:00 AM

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளரான மருது அழகுராஜ் பேட்டி:
ராமநாதபுரத்தில்
பன்னீர்செல்வம் பெயரில் ஐந்து பேரை போட்டியிட செய்து, ஓட்டுகளை
பிரித்தாவது அவரை வீழ்த்துவோம் என்ற முயற்சியில் ஈடுபடுகின்றனர். பழனிசாமி
அரசியல்வாதிகளுக்கு 'சீட்' கொடுக்காமல் மணல் விற்பவர்கள், மணல்
அள்ளுபவர்களை வேட்பாளர்களாக வைத்திருக்கிறார். குரங்கு தன் குட்டியை வைத்து
ஆழம் பார்ப்பது போல் பழனிசாமி தன் ஆட்களை வைத்து செயல்படுகிறார்.
அவருடன் இருப்பவர்கள் இந்த தேர்தலின் ஆழம் தெரிந்து குதித்தால், மூழ்கி விடுவோம்னு தப்பி ஓடினால், அவரும் என்னதான் செய்வார், பாவம்!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி: கடந்த 2017ல் கட்சி ஆரம்பித்த தினகரனால், கோவில்பட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லை. 'ஒரு தொகுதி கேட்டு, பா.ஜ., இரண்டு தொகுதி கொடுத்தது' என்றார் தினகரன். ஆடி தள்ளுபடி போல ஒரு சீட்டு வாங்கினால், ஒரு சீட்டு இலவசம் என தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.
அவருக்கு ஆடி தள்ளுபடி மாதிரி சீட் கொடுத்தது இருக்கட்டும்... வழியனுப்ப வந்தவங்களை வண்டியில ஏத்துற மாதிரி, பணம் வச்சிருக்க கான்ட்ராக்டர்களை இவங்க கட்சியில் வேட்பாளர் ஆக்கலையா?
த.மா.கா., பொதுச்செயலர் விடியல் சேகர் பேட்டி: கடந்த 1996ல் த.மா.கா.,வுக்கு கிடைத்த சைக்கிள் சின்னம், அரசியல் புரட்சியை ஏற்படுத்தியது. தமிழகத்திலும் இனி ஆட்சி மாற்றம் நிச்சயம் உண்டு என்பதற்கு அடையாளமாக தான் சைக்கிள் சின்னம் கிடைத்துள்ளது. தி.மு.க., ஆட்சிக்கு எதிரான மனநிலையில் உள்ளதால் மவுன புரட்சி வெடிக்கும்.
சைக்கிள் சின்னம் கிடைத்ததால, 2026ல் தமிழகத்தில் த.மா.கா., ஆட்சியை பிடிக்கும்; வாசன் முதல்வராவார்னு சொல்றாரா...? இவர் அந்த மாதிரி காமெடி பண்றவர் இல்லையே...?
தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை பேச்சு: பிரதமர் மோடி 10 ஆண்டு களுக்கு முன், 'ஒரே ஒரு வாய்ப்பு கொடுத்தால் நாட்டில் மாற்றம் கொண்டு வருவேன்' என்றார். என்ன மாற்றத்தை கொண்டு வந்தார். மோடி கொடுத்த வாக்குறுதியை கூட காப்பாற்ற முடியாமல், எப்படி துணிச்சலாக ஓட்டு கேட்கிறார். அவருக்கு துணை போனவர்கள் அ.தி.மு.க.,வினர்.
மோடி எந்த வாக்குறுதியை நிறை வேற்றினாரோ, இல்லையோ...? 10 ஆண்டுகளுக்கு முன், 'காங்கிரஸ் இல்லா பாரதம்'னு கொடுத்த வாக்குறுதியை 95 சதவீதம் நிறைவேற்றி விட்டாரா, இல்லையா?

