PUBLISHED ON : ஏப் 07, 2024 12:00 AM

தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி பேச்சு: கச்சத்தீவு,
ராமநாதபுரம் மன்னருக்கு தான் சொந்தம். அவரது வாரிசுகள் இதுவரை எந்தவித
சொந்தமும் கொண்டாடவில்லை. சர்வதேச நீதிமன்றத்தில் ராமநாதபுரம் மன்னர்
வாரிசு வழக்கு தொடர்ந்து, கச்சத்தீவு எங்களுக்கு சொந்தம் என்று கூற
சட்டத்தில் இடம் உண்டு. இந்த பிரச்னை இரு நாட்டு சம்பந்தப்பட்ட பிரச்னை.
விரைவில் தமிழக அரசு, ராமநாதபுரம் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களையும்,
பாதிக்கப்பட்ட மீனவர்களையும் சந்தித்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு
தொடரவும், கச்சதீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்கும்.
'இவ்வளவு நாளா
சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடராதது ஏன்? இப்ப என்ன திடீர் ஞானோதயம்
பிறந்து விட்டது' என்றெல்லாம் மக்கள் கேட்க மாட்டாங்களா?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: தமிழகத்தில் நட்சத்திர வேட்பாளர் சவுமியாவை உங்களுக்காக கொடுத்திருக்கிறோம். வெற்றியை தீர்மானிப்பது பெண்களின் ஓட்டுகள். கட்சி பேதமின்றி பெண்கள், அவரை உங்கள் வீட்டு பிள்ளையாக நினைத்து ஓட்டளிக்க வேண்டும். பெண்களுக்கு எந்த தீங்கு என்றாலும், அவர் முன்னால் நிற்பார்.
'நானோ, என் குடும்பத்தினரோ தேர்தல் அரசியலுக்கு வர மாட்டோம்'னு சொல்லிட்டு, முதலில் மகன், இப்ப மருமகள்னு வரிசை கட்டுறதுக்கு முதலில் இவர் பதில் தரணும்!
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு: தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசும் பிரதமர் மோடி, 'தி.மு.க.,-வையும், காங்., கட்சியையும் துடைத்தெறிய வேண்டும்' என்கிறார். இக்கட்சிகள் தியாகங்களால் வளர்ந்தவை. இந்திய இறையாண்மையை பாதுகாப்பதில், தி.மு.க., என்றைக்கும் சமரசம் செய்து கொண்டதில்லை. தி.மு.க.,-வை அவ்வளவு எளிதில் துடைத்தெறிய முடியாது.
அதெல்லாம் சரி... கட்சிக்காக இவரும், இவரது மகனும் செய்த தியாகங்கள் சிலவற்றை பட்டியலிட முடியுமா?
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேச்சு: பா.ஜ., வில் ரவுடிகள் உள்ளதாக, சேலத்துக்கு வந்த ஸ்டாலின் பேசியுள்ளார். முன்னாள் அமைச்சரான வீரபாண்டி ஆறுமுகத்தை விடவா அதிகம் வைத்துள்ளோம். கள்ளச்சாராய வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட காந்தி, இன்று தமிழக அமைச்சர். சுடுகாட்டு கூரை வழக்கில் சிக்கியவர், தற்போது சேலம் தி.மு.க., வேட்பாளர்.
'உங்க கட்சியில் இருக்கலாம்; நாங்க கட்சியில் வச்சிக்க கூடாதா'ன்னு 'ஏ கிளாஸ்' ரவுடிகளை மொத்தமா கட்சியில் சேர்ப்பது நல்ல விஷயமா என்ன?

