PUBLISHED ON : டிச 28, 2025 03:35 AM

கேரள மாநிலத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், திருவனந்தபுரம் மாநகராட்சியை, பா.ஜ., கைப்பற்றியது. இதையடுத்து, அம்மாநில பா.ஜ., பொதுச் செயலரான ஷோபா சுரேந்தர், திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்தார்.
பின், அவர் அளித்த பேட்டியில், 'கேரளாவில் பல ஆண்டுகளாக மனம் தளராமல் தொடர்ந்து போராடி வருகிறோம். தற்போது, உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, திருவனந்தபுரம் மாநகராட்சியை பிடித்துள்ளோம். அங்கு, காங்கிரஸ் கூட்டணியும், மார்க்சிஸ்ட் கூட்டணியும் எங்களை எதிர்த்து கடுமையாக போராடியும், பா.ஜ., வெற்றி அடைந்துள்ளது. இது, அடுத்து வரும் கேரள சட்டசபை தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாக உள்ளது' என்றார்.
இதை கேட்ட பா.ஜ., தொண்டர் ஒருவர், 'கேரள உள்ளாட்சி தேர்தல் வெற்றியை ஒரு பாடமா எடுத்துக்கிட்டு, தமிழக சட்டசபை தேர்தலில் நாமும் கடுமையா உழைக்கணும் பா...' என கூற, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.

