PUBLISHED ON : டிச 12, 2024 12:00 AM

டிசம்பர் 12, 1950
கர்நாடக மாநிலம், மைசூரில், மராட்டியர்களான ராமோஜிராவ் கெய்க்வாட் - ஜிஜாபாய் தம்பதியின்மகனாக, 1950ல், இதே நாளில் பிறந்தவர், சிவாஜிராவ் கெய்க்வாட் எனும் ரஜினிகாந்த்.
இவர் சிறுவயதிலேயே தாயை இழந்து, அண்ணன்களிடம் வளர்ந்து, கர்நாடக அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக பணியாற்றியபடியே நாடகங்களில் நடித்தார். நண்பர்கள் ஆலோசனையின்படி, சென்னை திரைப்படக் கல்லுாரியில் சேர்ந்து நடிப்பு கற்றார்.
கே.பாலசந்தர், இவரை, அபூர்வ ராகங்கள் படத்தில்வில்லனாக அறிமுகப்படுத்தி, ரஜினிகாந்த் என பெயர் சூட்டினார்.
புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும் உள்ளிட்ட படங்களின் வாயிலாக கதாநாயகனாக மாறினார். தில்லுமுல்லு, முரட்டுக்காளை, பில்லா, வேலைக்காரன், மனிதன் படங்களால், சூப்பர் ஸ்டாரானார்.
தளபதி, அண்ணாமலை, பாட்ஷா, முத்து, சந்திரமுகி, எந்திரன்உள்ளிட்ட படங்களால் வசூலில் சாதனை படைத்து, வெளிநாட்டு ரசிகர்களையும் கவர்ந்தார்.
இன்றும் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவரது, 74வது பிறந்த தினம் இன்று!

