PUBLISHED ON : செப் 14, 2024 12:00 AM

செப்டம்பர் 14, 1927
ஈரோடு மாவட்டம், ஊஞ்சலுாரில்,சுப்பிரமணியம் - குஞ்சம்மாள்தம்பதியின் மகளாக, 1927ல் இதே நாளில் பிறந்தவர் ஜீவரத்தினம். தன், 9 வயதில், சென்னையில் இருந்த கிருஷ்ணய்யா நாடக கம்பெனியில்சேர்ந்தார். கைலாச பாகவதர், குன்னக்குடி வெங்கட்ராமையர் உள்ளிட்டோரிடம் கர்நாடக இசை கற்றார்.
நாடகங்களில் பல்வேறு வேடங்களை ஏற்று, திருச்சி லோகநாதன், டி.ஆர்.மகாலிங்கம் உள்ளிட்டோருடன் பாட்டு பாடி நடித்தார். 'மாடர்ன் தியேட்டர்ஸ்' தயாரித்த, சதி அகல்யா படத்தில், தேவலோக மங்கையாக நடித்தார்; தொடர்ந்து பல படங்களில் நடித்தார்.
பக்த கவுரி திரைப்படத்தில் இவர் பாடிய, 'தெருவில் வாராண்டி வேலன்' பாடலால்புகழடைந்தார். தொடர்ந்து, கண்ணகி படத்தில் கவுந்தியடிகளாக நடித்ததுடன், சில பாடல்களையும் பாடினார். கண்ணகி பட பொன்விழாவில் சுவாமி தினகர், இவருக்கு, 'இசைக் குயில்' பட்டம் வழங்கினார். தன், 'மெர்க்குரி பிலிம்ஸ்' வாயிலாக சில படங்களையும் தயாரித்த இவர், 2000, ஜூலை 26ல் 72வது வயதில் மறைந்தார்.
பாடி, நடித்து, படம் தயாரித்தவர் பிறந்த தினம் இன்று!

