PUBLISHED ON : ஆக 30, 2024 12:00 AM

ஆகஸ்ட் 30, 1945
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை யில், 1945ல் இதே நாளில் பிறந்தவர் காந்திமதி. இவர், ஊர் திருவிழாவில் நடந்த கூத்து, நாடகங்களை பார்த்து, வசனம் பேசுவதிலும், நடிப்பதிலும் ஆர்வமாகி, எஸ்.வி.சகஸ்ரநாமம் நாடக குழுவில் இணைந்தார். இரவும் பகலும் படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமானார்.
பாரதிராஜாவின், 16 வயதினிலே படத்தில், குருவம்மாவாக தோன்றி மல்லுக்கு நின்றார். மண் வாசனை படத்தில் பழமொழி பேசும் கிராமத்து மனுஷி ஒச்சாயியாக நிலைத்தார். கிழக்கே போகும் ரயில், சுவரில்லாத சித்திரங்கள், சட்டம் என் கையில் உட்பட பல படங்களில் நடித்தார்.
சுருளிராஜனின் மனைவியாக இவர் நடித்த, மாந்தோப்பு கிளியே பட நகைச்சுவை காட்சிகள் அந்த காலத்தில் பிரபலம். தேவர் மகன் படத்தில் சிறு பாத்திரத்திலேயே முத்திரை பதித்தார். கமல், ரஜினி, சத்யராஜ், பிரபு, ராமராஜன் உள்ளிட்டோரின் அம்மாவாக பல படங்களில் நடித்தார். மதுரை, கோவை, சென்னை பாஷைகளை பேசி நடிப்பதில் கெட்டிக்காரரான இவர், 2011, செப்டம்பர் 9ல் தன் 66வது வயதில் மறைந்தார்.
நடிப்பில் கருப்பு - வெள்ளையாக தோன்றி, வண்ணமயமாக வளர்ந்த குணச்சித்திர நடிகை பிறந்த தினம் இன்று!

