தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/இது உங்கள் இடம்/பன்னீருக்கு முன் பழனிசாமி முந்துவாரா?

பன்னீருக்கு முன் பழனிசாமி முந்துவாரா?

பன்னீருக்கு முன் பழனிசாமி முந்துவாரா?


PUBLISHED ON : ஜன 14, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 14, 2024 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பன்னீருக்கு முன் பழனிசாமி முந்துவாரா?

மு.தினேஷ், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அண்ணாமலை தமிழக பா.ஜ., தலைவராக பொறுப்பேற்ற பின், பா.ஜ.,வை மக்களுக்கான கட்சியாக நிலை நிறுத்த, எதிர்க்கட்சி, கூட்டணி கட்சி என்று பாராமல், தவறுகளை துணிச்சலாக விமர்சனம் செய்தார்.

கூட்டணி தலைவர்களை தாண்டி, அ.தி.மு.க., தொண்டர்களின் இதய துடிப்பான ஜெயலலிதா, அண்ணாதுரை, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களையும் விமர்சனம் செய்தது, கூட்டணி பிளவுக்கு காரணமானது.

சமீபத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய பழனிசாமி, 'அ.தி.மு.க., ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கிறிஸ்துவ மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

'சிறுபான்மையின மக்களுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் உள்ள பாசப் பிணைப்பை எந்த காலத்திலும் பிரிக்க முடியாது.

மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமையும்போது, தலித் கிறிஸ்துவர்களுக்கு அரசால் மறுக்கப்படும் முன்னுரிமைகள் மீட்கப்படும்' என்று, 'ரவுண்டு' கட்டி, அடித்து

இருக்கிறார்.இது, ஒரு படத்தில் காமெடி நடிகர் முத்துக்காளை, 'உன்கிட்ட வாங்குன காசுக்கு ஏணி சின்னத்துல ஒரு குத்து, அவன்கிட்ட வங்குன காசுக்கு தென்னை மர சின்னத்துல ஒரு குத்து' என்பார். அதுபோல இருக்கிறது பழனிசாமியின் பேச்சு.பா.ஜ., சென்றதால் ஏற்பட்ட

வெற்றிடத்தை சரிக்கட்ட சிறுபான்மையினரை குறி வைத்திருக்கிறார். ஆனால், மூன்றாவது குத்தாக, பழனிசாமிக்கு வரும் லோக்சபா தேர்தலில் சிறுபான்மையின மக்கள் தக்க பரிசு தருவர் என்பதை அவர்

அறியவில்லை.

இதற்கு தான், 'கண்டனத்தை தாங்கிக் கொள்ளும் திட மனம் இல்லையென்றால் கடமையை நிறைவேற்ற முடியாது' என்று அண்ணாதுரை கூறினார். அவரது

பெயரில் கட்சி நடத்தும் பழனிசாமிக்கு இதுகூட தெரியவில்லை.அண்ணாமலை சமீபகாலமாக மேற்கொள்ளும் பாதயாத்திரை வாயிலாக அனைத்து சமுதாய மக்களையும் களத்தில் சந்தித்து, மக்களுக்கான தலைவராக உருவெடுத்திருக்கிறார். இதனால், லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வின் ஓட்டு வங்கி அதிகரிக்கும் என்பது உறுதி.

அரசியலில் பல்வேறு முகமூடிகளை போடும் தி.மு.க., போன்ற வலுவான கட்சியை வீழ்த்த, அ.தி.மு.க.,விற்கு பா.ஜ.,வின் ஆதரவு அவசியம். பன்னீர்செல்வத்திற்கு முன் பழனிசாமி முந்தினால், அவருக்கு செந்தில் பாலாஜியின் நிலை வராது.

இல்லையேல், மழை பெய்யும் போது சந்தையில் உப்பு விற்ற கதையாய், யார் தலைமையில் இருந்தாலும், பல லட்டர் பேடு கட்சிகளைப் போல், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய அ.தி.மு.க., காணாமல் போய் விடும்.



தேர்தல் ஆணையம் கவனத்திற்கு...!

எம்.ஆர்.ஜெயச்சந்திரன், திண்டுக்கல்லில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டில் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் அட்டையை இணைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது, தேர்தல் ஆணையம்.ஆனால், அதற்கு காலக்கெடு என்று ஏதும் விதிக்கவில்லை.தேர்தல் காலத்தில் பல்வேறு ஆவணங்களை காட்டி ஓட்டளிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால், கள்ள ஓட்டு போடுவதை தவிர்க்க முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, ஆணையம் குறிப்பிட்ட காலம் அல்லது தேதி நிர்ணயம் செய்து, ஆதார் இணைக்க உத்தரவிட வேண்டும். அப்போது தான், தேர்தல் ஆணையத்தின் நோக்கம் நிறைவேறும்.மேலும், கை ரேகை அல்லது கருவிழி சோதனை பதிவு மூலம், வாக்காளர்கள் ஓட்டளிக்கவும் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் போலி வாக்காளர்களையும், கள்ள ஓட்டுகளையும் முற்றிலும் தடுக்க முடியும்.எல்லாவற்றுக்கும் மேலாக, தேர்தல் காலத்தில் ஓட்டு போட, பரிசு பொருட்கள் மற்றும் பணம் வழங்கும் கட்சிகள், வேட்பாளர்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுபோன்ற கெடுபிடி நடவடிக்கைகளை எடுத்தால் தான், நாட்டில் உண்மையான ஜனநாயகம்மலரும். எனவே, இது குறித்து தேர்தல் ஆணையம் தீவிரமாக யோசிக்க வேண்டும்.

நல்லவர்கள் அரசியலுக்குவந்தால் போதும்!

பொ.ருக்மணிதேவி, பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'படித்தவர்களும், இளைஞர்களும் அரசியலுக்கு வரவேண்டும்' என்று, சமீபத்தில் சென்னையில் நடந்த மாணவியருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். ஆனால், படிக்காத காமராஜர் தந்த எளிமையான, நேர்மையான, துாய்மையான, தொலை நோக்கு பார்வையுடனான, அடுத்த தலைமுறையை பற்றி சிந்தித்து நடத்திய நல்லாட்சியை போல், இதுவரை இந்திய அளவில் எந்த மாநிலத்தை சேர்ந்த படித்த முதல்வரும் தந்ததில்லை. இதை, அவரது அரசியல் எதிரிகள் கூட ஏற்றுக்கொள்வர். எனவே, அரசியலுக்கு வர, படிப்பை ஒரு

தகுதியாக ஏற்றுக்கொள்ள முடியாது.அவ்வளவு ஏன்...? அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் படித்தவர்கள் தான். அவர்களில் எத்தனை பேர் வாங்கும் சம்பளத்திற்கு உண்மையாக, லஞ்சம் வாங்காமல், ஊழலுக்கு துணை போகாமல், நாட்டிற்கும், மக்களுக்கும் சேவை செய்கின்றனர்?நேரு, நரசிம்மராவ், மன்மோகன்சிங், வாஜ்பாய் போன்ற வயதான பிரதமர்களும் பெரிய அளவில் குறை சொல்ல முடியாத நல்லாட்சியையே தந்துள்ளனர். நாட்டிற்கு சுதந்திரம் வாங்கித் தந்தபோது, தேசத்தந்தை காந்தி கூட வயதானவர் தானே. எனவே, அரசியலுக்கு வர வயதை ஒரு தகுதியாக நிர்ணயம் செய்வது சரியல்ல.

அரசியல் என்பது தொழில் அல்ல; சேவை. காந்தி, காமராஜர், கக்கன், ஜீவா, முத்துராமலிங்கத் தேவர் போன்ற சேவை மனம் மிக்கவர்களால் மட்டுமே இருக்க வேண்டிய முக்கியமான துறை. ஆனால், இப்போது பல மடங்கு பணம் சம்பாதிக்கும் தொழிலாக அரசியலை மாற்றி விட்டனர்.தேர்தல் வெற்றிக்காக ஜாதி, மத, மொழி உணர்வுகளை துாண்டவும் அவர்கள் தயங்குவதே இல்லை. சேவை என்பது அறவே இல்லை. அமலாக்கத் துறை சோதனையின் போது தான், ஒவ்வொரு அரசியல்வாதியும் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்துள்ளனர் என்பதை நாம் பார்க்கிறோம்.

ஜனநாயகத்தை, பணநாயகமாக மாற்றி விட்டனர். எனவே, இன்றைய சூழ்நிலையில் படித்தவர்கள், இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதை விட, 'நல்லவர்கள் அரசியலுக்கு

வர வேண்டும்' என்று கூறுவதே சரியானது.

சந்தேகங்களுக்கு முதல்வர் பதில் தருவாரா?

எம்.கலைவாணி, அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொதுவாக அரசியல்வாதிகள், நீதிமன்ற தீர்ப்புகளோ, தேர்தல் முடிவுகளோ தங்களுக்கு சாதகமாக வந்தால், 'நீதி வென்றது' என்றும், பாதகமாக வந்தால், நீதிபதியை விமர்சிப்பதுடன், தேர்தலில் முறைகேடு நடந்ததாகவும் குற்றம் சுமத்துவர்.

சமீபத்தில், 'காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது செல்லும்' என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தி.மு.க., - எம்.பி.,க்கள் சிலர் விமர்சனம் செய்திருந்தனர்.

அதுபோல சமீபத்தில், குஜராத் அரசுக்கு எதிரான வழக்கு ஒன்றில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, 'சகோதரி பில்கிஸ் பானு வழக்கில், நீதி நிலை நாட்டப்பட்டிருக்கிறது; நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக அமைந்திருக்கிறது. அரசியல் லாபங்களுக்காக நீதி வளைக்கப்பட்டதை, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது' என்று கூறி இருக்கிறார், தமிழக முதல்வர் ஸ்டாலின்.

அதாவது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றும், பாராட்டியும் பேசியிருக்கிறார். தமிழக முதல்வருக்கு சில கேள்விகள்... நீங்கள் பாராட்டிய அதே உச்ச நீதிமன்றம் தான், 'நாடு முழுதும் மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு கட்டாயம்' என்று வழங்கிய தீர்ப்பு, மருத்துவக் கல்லுாரிகளில் நன்கொடை என்ற பெயரில் நடக்கும் கொள்ளையை தடுத்து நிறுத்தி, நடுத்தர, ஏழை மாணவர்களுக்கு நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக அமைந்தது. ஆனால், அதற்கு எதிராக சட்டசபையில் நீங்கள்

தீர்மானம் இயற்றியது ஏன்?

* 'அமைச்சர் செந்தில் பாலாஜி மீதுள்ள வழக்கை, அமலாக்கத்துறை விரைவில் விசாரிக்க வேண்டும்' என்று உத்தரவு பிறப்பித்ததும், அதே உச்ச நீதிமன்றம் தான். அப்படியெனில், செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர செய்வதும், அவரது ஜாமினுக்காக போராடுவதும் ஏன்?

* மற்றொரு அமைச்சரான பொன்முடிக்கு, சிறை தண்டனை வழங்கிய உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து, அவரை காப்பாற்ற நினைப்பது ஏன்?* ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று, கடந்த 2022 -நவம்பரில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பாராட்டும்

நீங்கள், உயர் நீதிமன்ற தீர்ப்பை மட்டும் ஏற்காதது ஏன்? இந்த சந்தேகங்களுக்கு முதல்வர் பதில் தருவாரா?

அவங்களுக்கு பச்சைக்கொடி; இங்கே உபதேசம்!

குரு பங்கஜி, சென்னையில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற, கவிஞர் வைரமுத்துவின் நுால் வெளியீட்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'பூமியின் காவலர் களாக இருந்த ஐம்பூதங்களை, மனிதன் மாசுபடுத்தியதால் புவி வெப்பமடைந்து, அந்த பூதங்கள் நம்மை தின்ன துவங்கியுள்ளன. இதனால் தான் கனமழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன' என்று பேசியுள்ளார்.இதை படித்ததும், சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. ஏனெனில், 'பிள்ளையை கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டிய கதை' போன்று அவரது பேச்சு இருந்தது.

ஆள்வோரின் ஆசியுடன், ஆற்று மணல் கொள்ளை, ஏரி, குளம் ஆக்கிரமிப்பு மற்றும் மலை, காடு அழித்தல் போன்றவை, தங்கு தடையின்றி தினமும் நடைபெறுகின்றன. இதை, 50 ஆண்டுகளாக பார்க்கிறோம்.ஆகையால், முதல்வர் ஸ்டாலின், 'ஐம்பூதங்களை மனிதன் மாசுபடுத்தினான்' என்பதற்கு பதில், 'திராவிட மாடல் கழக கண்மணிகள், இயற்கையை அழிக்கும் வில்லன்களாக திகழ்கின்றனர்' என, கூறியிருக்க வேண்டும்.

பணம் குவிக்கும் சுயநலத்துடன், ஐம்பூதங்களின் ஒன்றான நிலத்தை சுரண்டி மாசுபடுத்தும் செயலில் தினமும் ஈடுபடும், திராவிட மாடல் கட்சியின் தவப்புதல்வர்களை தடுத்து நிறுத்த, முதல்வர் ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? ஒருபுறம், ஆளும் அதிகார வர்க்கத்தினர் பாக்கெட்டுகள் நிரம்ப, இயற்கை கனிம வளங்களை சுரண்ட காட்டப்படும் பச்சைக்கொடி... மறுபுறம், ஊருக்கு உபதேசம்!



சபரிமலைபக்தர்களின்சங்கடம் தீருமா?

ரா.ஷண்முகசுந்தரம், அவினாசி, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்த ஆண்டு சபரிமலை சென்ற பக்தர்களின் துன்பம் சொல்லி மாளாது. 40 நாட்களுக்கு மேல் விரதமிருந்து, புனிதமாக கருதும் சபரிமலையில், கேரள போலீசாரால் பக்தர்கள் நடத்தப்

பட்ட விதம் மிகவும் வேதனை அளிக்கிறது.கடந்தாண்டை விட இந்த ஆண்டு கூட்டம் குறைவு தான்; வருமானமும் குறைவு தான். ஆனாலும், ஏன் இந்த நெரிசல், காத்திருப்பு என்று தெரிய வில்லை. பலர், சுவாமி

தரிசனம் செய்ய முடியாமல், மாலையை பாதியிலேயே கழற்றிவிட்டு வீடு திரும்பி விட்டனர்.மேலும் சிலர், நெரிசலையும் காத்திருப்பையும் கேள்விப்பட்டு, சபரிமலை செல்லாமலேயே வழியில் உள்ள அய்யப்பன் கோவில்களில் தரிசனம் முடித்து, திரும்பி விட்டனர். பலர், 12 மணி நேரத்திற்கும் அதிகமாக காத்திருந்து மயங்கி சரிந்துள்ளனர்... அவர்களுக்கு தண்ணீர் கொடுக்கவும் கூட ஆட்கள் இல்லை.

மேலும், பெருவழிப் பாதை கரிமலை உச்சியில், அகில பாரத அய்யப்பா சேவா சங்கம் வாயிலாக வழங்கப்பட்ட கஞ்சி, அங்குள்ள உணவு விடுதிகள் வாங்கிய கோர்ட் தடை வாயிலாக நிறுத்தப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் கவனித்தால், ஏதோ வேண்டாத ஒன்று சபரிமலையில் நடப்பதாக உணர முடிகிறது.தேவசம் போர்டுக்கும், கேரள அரசுக்கும் சண்டை எனவும், அதனால் போலீசார் பக்தர்களை கண்டுகொள்வதில்லை அல்லது மிக கடுமை காட்டுகின்றனர் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

மேலும், கடவுள் நம்பிக்கையற்ற கேரள கம்யூனிஸ்ட் அரசு, இப்படி கடும் கெடுபிடிகள் காட்டினால் தான், ஹிந்து பக்தர்கள் வெறுத்து போய், சபரிமலைக்கு வருவதை குறைத்துக் கொள்வர் என்று திட்டமிட்டு செயல்படுவதாகவும் ஒரு பேச்சு

அடிபடுகிறது. ஆண்டின் எல்லா நாட்களும் கூட்டம் இருக்கும் திருப்பதி தேவஸ்தானத்தை பார்த்து சபரிமலை தேவஸ்தானம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.பெருவழியில் செல்லும் பக்தர்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தித் தர வேண்டும்.அடுத்த ஆண்டிலாவது, பக்தர்கள் நல்ல முறையில் சென்று அதிக நேரம் காத்திருக்காமல் அய்யனை தரிசித்து வர, அய்யப்பன் அருள் புரிவானாக!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us