PUBLISHED ON : மார் 18, 2026 01:57 AM

பதவியே முக்கியம்!
ஆர்.மகேசன், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட, சண்டைக்காரன் காலில் விழுவது மேல்' என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.
இதைப்புரிந்து கொண்ட அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க.,வில் ஐக்கியமாகிவிட்டார்.
தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க.,வில் முதல்வர் பதவி வகித்த பன்னீர்செல்வம், தங்களின் ஜென்ம விரோதியாக கருதப்பட்ட தி.மு.க.,வில் இணைந்திருப்பது வெட்கக்கேடான செயல்!
நேரடியாக பழனிசாமியை சந்தித்து நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியிருந்தால், மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைந்திருக்கலாம்; அதற்கு அவரது தன்மானம் இடம் கொடுக்கவில்லை. ஆனால், எதிராளியின் கட்சியில் இணையும்போது தன்மானம் தடுக்கவில்லை.
முதல்வர் நாற்காலி சுகத்தை சிறிதுகாலம் அனுபவித்த பன்னீர்செல்வம், இனிமேல், தான் சேர்ந்துள்ள கட்சி நிகழ்ச்சிகளில் தன் மகன் வயதையொத்த உதயநிதி மேடைக்கு வரும்போது, எழுந்து நின்று சலாம் போட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளார்.
அதனால் என்ன... அவருக்கும், அவர் மகனுக்கும் பதவி கிடைக்குமல்லவா?
அரசியல்வாதிகளை பொறுத்தவரை பதவிக்கு முன், தன்மானம் ஒன்றும் பெரிதல்லவே!
பன்னீர்செல்வத்தை போல் தன்மானத்தை மூட்டை கட்டிவிட்டு தனக்கும், தன் மகனுக்கும் பதவி கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தில், தி.மு.க.,விடம் அடிபணிந்து கிடக்கும் மற்றொரு விலைபோகாத அரசியல்வாதி வைகோ!
தமிழகமே அதிருமளவுக்கு இவர் அடித்த ஜால்ரா ஓசை, பாவம் தி.மு.க., தலைமையின் காதுகளுக்கு எட்டவில்லை போலும்!
அதனால்தான், தமிழகத்தில் பூதக்கண்ணாடி வைத்து தேடுமளவுக்கு காணாமல் போயிருக்கும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு கொடுக்கும் மரியாதை கூட வைகோவிற்கு கொடுக்கப்படவில்லை.
நான்கைந்து சீட்டுகள் கிடைத்தாலும், கம்யூனிஸ்ட்டுகளுக்கு அவர்கள் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படுகிறது.
ஆனால், நான்கு சீட்டுகளை கொடுத்து, அதில் மூன்றில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்து, ம.தி.மு.க., என்ற கட்சியின் அடையாளத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும் மாபெரும் தந்திரத்தை கையாண்டு வருகிறது, தி.மு.க., தலைமை.
இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அக்கட்சியை தி.மு.க.,வுடன் இணைக்கும் மாபெரும் விழா அறிவாலயத்தில் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வார், வைகோ.
ஏனெனில், அரசியல்வாதிகளுக்கு தன்மானத்தைவிட பதவியே முக்கியம்!
கேட்கிறவர் கேணையர் அல்ல! ஆ.பட்டிலிங்கம், பேரூர், கோவை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: அனைத்துலக வள்ளலார் மாநாடு சமீபத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக முதல்வர், 'ஹிந்து சமய அறநிலையத் துறையில், தி.மு.க., பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளது. 20 முதல் 100 ஆண்டுகள் வரை திருப்பணி நடக்காமல் இருந்த 4,192 கோவில்களில் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. மேலும், 12,931 கோவில்களில், 81,00 கோடி ரூபாய் மதிப்பில், 28,479 திருப்பணிகள் நடந்து வருகின்றன' என்று கூறியுள்ளார்.
நுாறு ஆண்டுகள் திருப்பணியே நடக்காமல் ஒரு கோவில் இருந்தால், நிச்சயமாக அது இடிந்து, அஸ்திவாரம் மட்டும் தான் இருக்குமே தவிர, அங்கு வழிபாடுகள் நடந்திருக்காது. அப்படிப்பட்ட கோவில்களை தான் இவர்கள் தேர்ந்தெடுத்து திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் நடத்தியதாக கூறுகின்றனர்.
அது எந்தெந்த கோவில்கள் என்பதை அறநிலையத்துறை அறிக்கை வெளியிடுமா?
இதில், 4,192 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக கூறுகிறார், ஸ்டாலின். இக்கோவில்கள் அனைத்தும் சிவனையும், பெருமாளையும், முருகனையும் பரம்பரையா க வழிபடுவோரின் நன்கொடையால் நடத்தப்பட்டதே தவிர, திராவிட மாடல் அரசால் ஒரு நயா பைசா கூட செலவு செய்யப்படவில்லை.
கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்துவிட்டு, 'நாங்கள் தான் பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்தோம்' என்று பெருமை பேசுகிறார், ஸ்டாலின். அதேநேரம், அந்த தேங்காய் எவருடையது என கூறுவது இல்லை.
கல்வெட்டுகளில் நன்கொடையாளர்களின் பெயர்களை பதிவு செய்வதற்கு பதில், கோவிலுக்காக நயா பைசா செலவு செய்யாத கட்சிக்காரர்களின் பெயர்கள் பதிவு செய்யப்படுகின்றன.
உழைப்பவர் ஒருவர் இருக்க, கள்ள அறுவடை செய்து கொண்டு அதில் பெருமை பீற்றுகிறார், திராவிட மாடல் முதல்வர்.
கோவில் காரியங்கள் தான் இப்படி என்றால், வள்ளலார் விஷயத்திலும் பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார், ஸ்டாலின்.
'ஜாதி சமய வேறுபாடுகள் இல்லாத சமூகத்தை கட்டமைக்க வேண்டும் என்ற வள்ளலாரின் கனவு தான், திராவிட இயக்கத்தின் உயிர் மூச்சு கொள்கை. அதனால் தான் திராவிட இயக்கம் உருவானதில் இருந்து, தொடர்ந்து வள்ளலாரை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்' என்று கதையளந்துள்ளார்.
என் வயது 89; 1952 முதல் 1967 வரை தி.மு.க.,வின் தீவிர அனுதாபியாக இருந்தவன்!
அக்காலத்தில் முரசொலி பொங்கல் மலர்களில், நெடுஞ்செழியன், ஈ.வெ.கி.சம்பத், புதுவை சிவப்பிரகாசம், மு.வ.புலவர் குழந்தை, க.அன்பழகன், டாக்டர் சிதம்பரநாதன், கா.அப்பாத்துரை போன்றோரின் கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன. ஆனால், வள்ளலார் வாழ்க்கை வரலாறு குறித்தோ, அவர் ஆற்றிய சமுதாய தொண்டுகள் குறித்தோ எவரும் கட்டுரையோ, கவிதையோ எழுதியதில்லை. சுருக்கமாக சொன்னால், வள்ளலாரை எவரும் கண்டுகொண்டதே இல்லை.
அதுமட்டுமல்ல... 2006ல் ஒரு திருமண விழாவில் பங்கேற்ற அன்றைய முதல்வர் கருணாநிதி, 'வள்ளலாரை தீயிட்டு கொளுத்தி விட்டு, ஜோதியில் கலந்து விட்டதாக கூறுகின்றனர்' என, தம்பதியை வாழ்த்திப் பேசுவதற்கு பதில், வள்ளலாரை வசை பாடினார்.
வள்ளலார் சித்தி அடைந்ததை சிறுமைப்படுத்திப் பேசி, அவரை தெய்வமாக வழிபடும் பக்தர்களை வேதனை அடைய செ ய்தவர், கருணாநிதி.
ஆனால், திராவிட இயக்கம் உருவானதில் இருந்து வள்ளலாரை உயர்த்திப் பிடிப்பதாக கூறுகிறார், ஸ்டாலின்.
கடவுளை நிந்தனை செய்த கூட்டம் எப்படி ஆன்மிகவாதியான வள்ளலாரை போற்றி புகழ்ந்திருக்க முடியும்?
கேட்கிறவர் கேணையராக இருந்தால், எலி ஏரோபிளேன் ஓட்டுமாம்; அதுபோல் உள்ளது ஸ்டாலின் பேச்சு!

