PUBLISHED ON : மார் 15, 2026 02:02 AM

தேச நலனை முன்னிறுத்துங்கள்!
எஸ்.கீதாஞ்சலி,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ரஷ்யாவிடமிருந்து
இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து, அமெரிக்கா சமீபத்தில்
விடுத்துள்ள அறிக்கை, நம் நாட்டு அரசியலில் தேவையற்ற விவாதங்களை
கிளப்பியுள்ளது.
'இந்தியா எண்ணெய் வாங்குவதை நாங்கள்
அனுமதிக்கிறோம்' என்று அமெரிக்கா கூறுவது, ஏதோ அவர்கள் அனுமதி
கொடுத்தால்தான் இந்தியா இயங்க முடியும் என்பது போன்ற மாயையை
உருவாக்குகிறது.
இதை பிடித்துக்கொண்டு, 'இந்தியாவின் இறையாண்மை
அடகு வைக்கப்பட்டுவிட்டது; மோடி அரசு பலவீனமாக உள்ளது' என்று இங்குள்ள
எதிர்க்கட்சிகள் கூக்குரலிடுகின்றன.
உண்மையில் இது, அமெரிக்காவின் திட்டமிட்ட ராஜதந்திர சதி என்பதை, நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ரஷ்யா - உக்ரைன் -போர் துவங்கிய காலத்திலிருந்தே, மேற்கத்திய நாடுகளின்
கடும் அழுத்தத்தையும் மீறி, இந்தியர்களின் நலனுக்காகவும், பெட்ரோல் விலையை
கட்டுக்குள் வைக்கவும், ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்கி வருகிறது.
இது நம் வெளியுறவுக் கொள்கையின் சுதந்திரமான முடிவு!
இந்நிலையில், தற்போது, ரஷ்யாவிடம் இருந்து நாம் எண்ணெய் வாங்குவதை,
'அனுமதிப்பதாக' அமெரிக்கா கூறுவதன் நோக்கம், இந்தியாவிற்கும்,
ரஷ்யாவிற்கும் இடையே உள்ள ஆழமான நட்புறவில் விரிசலை ஏற்படுத்துவது தான்!
'நாங்கள் சொன்னதால்தான் இந்தியா உங்களிடம் எண்ணெய் வாங்குகிறது' என்ற
பிம்பத்தை உருவாக்கி, சர்வதேச அரங்கில் இந்தியாவின் தனித்துவமான மதிப்பை
குறைக்க முயற்சிக்கிறது, அமெரிக்கா.
அமெரிக்காவின் இத்தகைய
அறிக்கைகள், இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளுக்கு ஓர் ஆயுதமாக மாறும்
என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். இதன் வாயிலாக மோடி அரசுக்கு
உள்நாட்டில் நெருக்கடியை கொடுத்து, போரில் இந்தியாவின் நடுநிலையை குலைப்பதே
அவர்களின் மறைமுகத் திட்டம்!
உலகிலேயே கச்சா எண்ணெய்
சுத்திகரிப்பில், இந்தியா ஒரு முக்கிய மையமாகத் திகழ்கிறது. ரஷ்யாவிடம்
குறைந்த விலைக்கு வாங்கி, அதை சுத்திகரித்து ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியா
ஏற்றுமதி செய்கிறது. இதில், அமெரிக்காவிற்கு பெரும் வயிற்றெரிச்சல்!
அதன் வெளிப்பாடு தான், 'அனுமதி' நாடகத்திற்கு காரணம்!
நம் நாட்டின் இறையாண்மை என்பது இன்னொரு நாடு கொடுக்கும் பிச்சை அல்ல; பல
தசாப்தங்களாக இல்லாத அளவிற்கு, சர்வதேச அழுத்தங்களுக்கு பணியாமல், மத்திய
அரசு எடுத்து வரும் துணிச்சலான முடிவுகளை, 'பலவீனம்' என்று எதிர்க்கட்சிகள்
கூறுவது முதிர்ச்சியற்ற அரசியல்!
நம் நாட்டை பலவீனப்படுத்த நினைக்கும் வெளிநாட்டு சக்திகளுக்கு, உள்நாட்டு எதிர்க்கட்சிகள் துணை போவது துரதிர்ஷ்டவசமானது.
இனியாவது, எதிர்க்கட்சிகள் தேச நலனை முன்னிறுத்தி சிந்திப்பது அவசியம்!
தமிழகம் முன்னேறாது! என்.கந்தசாமி, சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு!' என்கிறார் ஐயன் திருவள்ளுவர்.
ஒரு சொல்லை யார் சொல்கிறார் என்று ஆராய்வதை காட்டிலும், அந்த வார்த்தையில் பொதிந்திருக்கும் பொருளை சரியாக புரிந்து கொள்வதே, உண்மையான பகுத்தறிவு!
அவ்வகையில், 'முதல் வர் ஸ்டாலின், 1,000 ரூபாய் கொடுத்தார்; அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, 'நான் ஆட்சிக்கு வந்தால், 2,000 ரூபாய் தருவேன்' என்கிறார். திரைப்பட நகைச்சுவை காட்சி போல, 1,000, 2,000, 3,000, 4,000 என சொல்லி, கடைசியில், 'பிம்பிலிக்கா பிளாப்பி' என்று தான் ஆகும்.
'இலவசங்கள் பெற வேண்டிய நிலையில் இருந்து, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவேன் என்று எந்த அரசியல் கட்சியும் சொல்வதில்லை; சொல்லும் எங்களையும் கவனிப்பதில்லை.
'ஒரே நாளில், டாஸ்மாக் கடைகளில், 760 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனை ஆகிறது என்றால், மக்கள் குடிக்க பணம் வைத்திருக்கின்றனர். நடிகர் விஜய் படம் முதல் நாள், முதல் காட்சியே, 34 கோடி ரூபாய் வசூலாகிறது. 50 ரூபாய் டிக்கெட்டை, 2,000, 3,000 ரூபாய் கொடுத்துக் கூட வாங்கி பார்க்கின்றனர். இப்படி பொழுது போக்கிற்கும், மதுவிற்கும் செலவு செய்ய பணம் வைத்திருப்போருக்கு, எதற்கு இலவசம் ?
'மக்களின் அறிவை, ஆற்றலை உழைப்பில் ஈடுபடுத்தி, உற்பத்தியை பெருக்கும் நாடுதான் வளரும்; உயரும்' என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அவர் கூறுவது போல், சினிமா தியேட்டர்களிலும், டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் பிதுங்கி வழிந்து கொண்டிருக்கிறதே தவிர, 'ஈ'ஓட்டிக் கொண்டிருக்கவில்லை.
அதேபோன்று, நகைக்கடைகளிலும், ஜவுளிக்கடைகளிலும் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு கூட்டம் அலை மோதுகிறது.
உண்மை இவ்வாறிருக்க, சமூக பாதுகாப்பு திட்டம், விஞ்ஞான பாதுகாப்பு திட்டம், கெமிஸ்ட்ரி, பயாலஜி, ஜுவாலஜி பாதுகாப்பு திட்டம் என்பது போன்று, பல்வேறு நாமகரணங்களை சூட்டி, இலவசங்களை ஆட்சியாளர்கள் கொடுக்கத் தான் வேண்டுமா?
தமிழக மக்களுக்கு இலவசங்களை கொடுத்து, ஓர் அசிங்கமான அரசியல் சூழ்நிலைக்கு மக்களை பழக்கியுள்ளனர், அரசியல்வாதிகள்.
இப்போது, இலவசங்களை கொடுக்காவிட் டால், வாக்காளர்கள் ஓட்டுச்சாவடி பக்கமே தலைவைத்து படுக்க மாட் டார்கள்.
அரசியல் கட்சிகள் கொடுக்கும் இலவசங்கள், நம் வாழ்க்கை தரத்தை உயர்த்தாது; முன்னேற்றாது; முன்னேறவிடாது என்ற உண்மையை மக்கள் புரிந்து கொண்டு திருந்தாத வரை, தமிழகம் முன்னேறாது!
பிரதமர் கவனத்திற்கு செல்லுமா? ஆ.லோகியா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'விளிம்பு நிலை மக்களை சந்தித்து குறைகளை கேளுங்கள்' என, பா.ஜ.,மேலிடம் தொண்டர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேசமயம், தனியார் துறையில் உழைத்து, ஓடாய் தேய்ந்துபோன மூத்த குடிமக்களின் குரல், மத்திய அரசுக்கு கேட்பதில்லையே ஏன்?
தனியார் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, இ.பி.எப்., எனப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் வாயிலாக, மிகக் குறைவான தொகையே பென்ஷனாக வழங்கப்படுகிறது. இப்பணம் கணவன் - மனைவி என இருவரின் மூன்று வேளை உணவுக்கு கூட போதுமானதாக இல்லை.
எதிர்காலம் வாழ்வா - சாவா என்ற நிலையில் வாழ்கிறோம். ஓய்வூதியத்தை உயர்த்தி தரக்கோரி இந்த வயதான காலத்தில் முச்சந்தியில் மேடை போட்டு கூப்பாடு போட வேண்டுமா, உண்ணாவிரதப் போராட்டம், ஆர்ப் பாட்டம் நடத்த வேண்டுமா?
ஆடம்பரமாக வாழ கேட்கவில்லை. எங்கள் வாழ்க்கைப்பாட்டிற்கு தானே ஓய்வூதியத்தை உயர்த்தி தர கோருகிறோம்.
மூத்த குடிமக்களின் குரல், பிரதமர் கவனத்திற்கு செல்லுமா? எங்கள் கோரிக்கைகள் நிறைவேறுமா?

