/
தினம் தினம்
/
இது உங்கள் இடம்
/
பிராய்லர் கோழியான மக்கள் நீதி மய்யம்!
/
பிராய்லர் கோழியான மக்கள் நீதி மய்யம்!
PUBLISHED ON : மார் 11, 2026 01:35 AM

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வரும் சட்டசபை தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சி, தி.மு.க.,வுக்கு எவ்வாறு பலம் சேர்க்கும் என்பதை புள்ளி விபரங்களுடன் கொடுத்துள்ளதாகவும், அதை, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தொகுதி பங்கீட்டு பேச்சுக் குழுவினர் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார், அக்கட்சியின் பொதுச்செயலர் அருணாச்சலம்.
முட்டைகளை கோழி அடை காப்பது போல அடைகாத்து, குஞ்சுகள் பொரிந்த பின், எத்தனை என்று சொல்கிறோம், என்று வேறு தமாஷ் செய்துள்ளார்.
ம.தி.மு.க.,வோ, தே.மு.தி.க.,வோ எந்த மு.க.,வாக இருந்தாலும் மு.க.ஸ்டாலின் பதில் ஒன்றுதான்... 'கூட்டணிக் கட்சிகள் தொகுதிகளை கத்தையாகக் கேட்டாலும், நான் ஒத்தையாகத்தான் கொடுப்பேன்' என்பது தான் அது!
அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டுள்ள வைகோ கூட, தன் பலத்தைவிட பலவீனத்தை நன்கு அறிந்திருக்கிறார். கூடுதல் சீட்டுக்காக, தி.மு.க.,விற்கு பல்லக்குத் துாக்கிய திருமாவளவனும், ஜால்ரா அடித்த கம்யூனிஸ்டுகளும், காங்., கின் நி லையைப் பார்த்து அடக்கி வாசிக்கின்றன.
கூட்டணியில் உள்ள மற்ற துண்டு துக்கடா கட்சிகள், பேசாமல் கிடைத்ததை வாங்கிச் செல்கின்றன. ஆனால், நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானான மக்கள் நீதி மய்யம், தி.மு.க.,விற்கு பலம் சேர்க்கப்போவதாக சொல்லி, கூடுதல் சீட்டிற்கு அடி கோலுகிறது.
இதில் கோழி, முட்டை என்ற தமாஷ் வேறு; தி.மு.க.,வை பொறுத்தவரை மக்கள் நீதி மய்யம் கட்சி என்பது, கறிக்காக வளர்க்கப்படும் பிராய்லர் கோழியே தவிர, முட்டையிட்டு இனவிருத்தி செய்யும் நாட்டுக்கோழி அல்ல! lll
கருணாநிதியை மிஞ்சிய சாதனை தான்!
பிரகாஷ் பாலகிருஷ்ணன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த சில நாட்களாக தொலைக்காட்சிகளில் விதவிதமாக விளம்பரங்களை வெளியிடுகிறது, தி.மு.க., அரசு. இவ்விளம்பரத்தின் ஆரம்பத்தில் ஒரு சிறுமியோ, பெண்மணியோ, முதியவரோ, மத்திய வயது ஆண்மகனோ கருப்பு - வெள்ளை காட்சியில் அழுவது போல் ஆரம்பித்து, 'இருண்ட காலம்' என்று தொடங்கி, நீட் தடை, சி.ஏ.ஏ., எதிர்ப்பு, எலும்பு கூடுகளுடன் விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு செய்த போராட்டத்தை காட்டி பின், 'உரிமையை காப்போம்' என்று விளம்பரத்தை முடிக்கின்றனர்.
அது மட்டுமில்லாமல், திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வரும் முன், தமிழகம் வறண்டு இருந்ததாகவும், பயிர்கள் வாடிக் கிடந்ததாகவும், அரசு அதிகாரிகள் மக்களை மிரட்டுவதாகவும் காட்டுகின்றனர்.
அத்துடன், இதுவரை தமிழக மாணவர்கள் பசியால் வாடியபடி பள்ளிக்கு சென்றதாகவும், ஸ்டாலின் முதல்வரானதும் தான், காலை உணவுத் திட்டம் தீட்டி, அவர்களின் பசியை போக்கியதாகவும் விளம்பரம் செய்யப்படுகிறது.
திராவிட மாடல் முதல்வரின் தந்தை கருணாநிதி ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தாரே... அப்போதும் மாணவர்கள் பசியோடு தான் பள்ளி சென்றனரா... அதையெல்லாம் கண்டுகொள்ளாத கையாலாகாத, நிர்வாக திறனற்ற முதல்வராக இருந்தாரா கருணாநிதி?
காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று இவர்கள் ஆட்சியில் தமிழகம் வறண்டு கிடந்தது... திராவிட மாடல் முதல்வர் ஆட்சிக்கு வந்த பின் தான், தமிழகம் வளர்ச்சி அடைந்ததோ!
வீதிதோறும் மதுக்கடைகளை திறந்து வைத்து, மக்களை குடிக்க வைத்து, பல குடும்ப பெண்களின் தாலியை அறுத்து ஆட்சி நடத்தும் ஸ்டாலின் தலைமையில் தமிழகம் ஒளிர்கிறதோ!
எட்டு லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு அரசு வேலை கொடுத்ததாக சொல்கிறார், ஸ்டாலின். ஆனால், 9,000 பேர் எழுதும் குரூப் 2 தேர்வை ஒழுங்காக நடத்த முடியவில்லை.
வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதாக கூறி, மக்கள் வரிப்பணத்தில் ஆண்டுதோறும் குடும்பத்துடன் டூர் போன ஸ்டாலின், தமிழகத்திற்கு கொண்டு வந்த முதலீடுகள் எத்தனை கோடி?
தமிழகத்திற்கு வரும் நிறுவனங்கள் எல்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்ற ரீதியில் அடித்துப் பிடித்து ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவுக்கு செல்வது ஏன்?
டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழகத்தை மாற்றப் போவதாக வாய் சவடால் விட்ட ஸ்டாலின், தமிழகத்தை கடன்கார மாநிலமாக மாற்றியது தான், அவரது ஆட்சியின் சாதனையோ!
இவ்வளவு கட்சிகள் சேர்ந்தால் தான் வெற்றியா?
கே.ஆர்.பிரேம்குமார், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ -மெயில்' கடிதம்: 'கூட்டணி தலைமை செய்வது சரியல்ல... ஆட்சியில் பங்கு வேண்டும்... இனியும் அவமானப்பட முடியாது' என்றெல்லாம் கூவிய காங்கிரஸ், தி.மு.க., உதைத்த உதையில், அக்கட்சியின் அடியை வருடி, உச்சி முகர்ந்து, தி.மு.க., காலடியில் விழுந்து விட்டது.
தி.மு.க., எவ்வளவு குறைவான தொகுதி கொடுத்தாலும் அதை ஒப்பு கொள்ள வேண்டிய, இக்கட்டான அரசியல் சூழலில் தான் காங்கிரஸ் உள்ளது என்பது, எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான்.
இதை நன்கு அறிந்ததால் தான், தி.மு.க.,வின் இரண்டாம் நிலை தலைவர்கள் கூட, தங்களது ஆதரவு இல்லையென்றால், சட்டசபையில் காங்., நுழையவே முடியாது என பொதுவெளியில், 'கமென்ட்' அடித்து, காங்., கட்சியை அவமானப்படுத்தினர். மக்களின் ஆதரவு காங்., கட்சிக்கு இல்லை என்பதை எந்த கட்சியும் இவ்வளவு வெளிப்படையாக கூறியதில்லை.
இவ்வளவு அசிங்கப்பட்டும் மீண்டும், தி.மு.க.,விடமே சரணாகதி அடைந்து, சுயமரியாதை என்ற வார்த்தையை, காங்கிரஸ் தன் அகராதியில் இருந்தே நீக்கி விட்டது என்றே சொல்லலாம். இது குறித்து கவலைப்படும் தலைவர்கள் எவரும் அக்கட்சியில் இல்லை என்பதும் உறுதியாகி விட்டது.
'தி.மு.க., ஆதரவு இல்லையெனில், லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டேன்' என்று கூறியவர் தான் காங்., மூத்த தலைவர் ப.சிதம்பரம். அதை நினைவில் வைத்திருந்து, சரியான நேரத்தில் காய் நகர்த்தி, அவரை வைத்தே, காங்., கட்சியை மடக்கி விட்டார், தி.மு.க., தலைவர் ஸ்டாலின்,
மொத்தம், 23 கட்சிகள் தி.மு.க., கூட்டணியில் அணிவகுக்கின்றன. பார்ப்போம், என்ன நடக்கிறதென்று!

