ADDED : ஜூன் 12, 2026 06:26 AM

அவிநாசி: திருப்பூர் மாவட்டம், அவிநாசி, ராயம்பாளையத்தில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில் வழங்கப்பட்ட காலை உணவு தரமற்றதாக இருந்ததாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
நேற்று காலை மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்ட உப்புமாவில் ரவை சரிவர வேகாமல் இருந்ததுடன், சிறு பூச்சிகள் மற்றும் பூச்சிக்கூடுகளும் காணப்பட்டது. இதை கவனித்த பெற்றோர் ஒருவர், தலைமை ஆசிரியர் கண்மணியிடம் புகார் தெரிவித்தார்.
''மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டத்தில் சமையல் செய்யும் ஒப்பந்ததாரராக கோகுல் என்பவர் உள்ளார். இதுவரை இதுபோன்ற புகார்கள் வரவில்லை; இனி தவறு நடக்காமல் பார்த்துக்கொள்வதாக ஒப்பந்ததாரர் தெரிவித்துள்ளார்'' என்று தலைமையாசிரியர் கூறினார்.
மாணவர்களின் உடல் நலனுடன் தொடர்புடைய விவகாரம் என்பதால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மற்ற பள்ளிகளிலும் உணவின் தரம் குறித்து கல்வித்துறை ஆய்வு நடத்த வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
