PUBLISHED ON : ஜன 19, 2025 12:00 AM

தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலர் ஆனந்த்: தமிழகத்தில் ஆளும் அரசுகள், அதிகாரப் பலத்துடன், பல மடங்கு அரசியல் அவலங்களை அரங்கேற்றியே இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று வருகின்றன. அதன் அடிப்படையில், நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலவே, பிப்., 5ல் நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையும், தமிழக வெற்றிக் கழகம் புறக்கணிக்கிறது; அத்துடன் எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை.
டவுட் தனபாலு: அது சரி... ஒரு தொகுதி இடைத்தேர்தல்லயே, ஆளுங்கட்சியின் அதிகாரப் பலத்தை எதிர்க்க பயப்படுற நீங்க, பொது தேர்தல்ல, 234 தொகுதிகள்லயும் எதிர்த்து எப்படி களமாடப் போறீங்க என்ற, 'டவுட்' வருதே!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில், உதயநிதி தன் மகனின் நண்பர்களுக்காக, பெண் கலெக்டரை நாற்காலியை விட்டு எழுந்திருக்கச் செய்தது, தமிழகத்தின் இருண்ட காலமான, தி.மு.க.,வின், 2006 - 11 ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம். இந்த மன்னராட்சி மன நிலைக்கு, தமிழக மக்கள், 2026ல் முடிவு கட்டுவர்.
டவுட் தனபாலு: தி.மு.க., ஆட்சிக்கு, 2026ல் மக்கள் முடிவு கட்டுவாங்கன்னு சொல்ற நீங்க, அந்த இடத்தில் பா.ஜ., அமரும்னு ஏன் சொல்ல மாட்டேங்குறீங்க... உங்க கட்சி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை உங்களுக்கே இல்லையா என்ற, 'டவுட்' வருதே!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி: துணை முதல்வர் உதயநிதி, ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைக்க அலங்காநல்லுார் சென்றதில் தவறில்லை. அவரின் மகன் இன்பநிதி சென்றதிலும் தவறில்லை. இன்பநிதி தன் நண்பரோடு பின்னால் அமர்ந்து பார்ப்பதாகச் சொன்னதும் தவறில்லை. ஆனால், ஒரு அமைச்சர், அமர்ந்திருந்த கலெக்டரை எழச் செய்து, இன்பநிதியின் நண்பரை, கலெக்டர் இடத்தில் அமரச் செய்தது மாபெரும் தவறு; அவமரியாதையின் உச்சம்.
டவுட் தனபாலு: இன்பநிதியே வேண்டாம்னு ஒதுங்கி போனாலும், அமைச்சர் பெருமக்கள் அவரை அரசியலில் இழுத்து விட்டுடுவாங்க பாருங்க... அப்படி செய்தால் தான், தாங்களும், தங்களது வாரிசுகளும், வாழையடி வாழையா பதவி சுகத்தை அனுபவிக்க முடியும் என்ற அமைச்சர்களின் சுயநலமும் அதில் அடங்கியிருக்குது என்பதில், 'டவுட்'டே இல்லை!

