'தினமலர்' செய்தி எதிரொலி: துருப்பிடித்த குழாய் அகற்றம் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
'தினமலர்' செய்தி எதிரொலி: துருப்பிடித்த குழாய் அகற்றம் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு
PUBLISHED ON : மே 07, 2026 08:50 PM

பல்லடம்:'தினமலர்' செய்தி எதிரொலியால், பல்லடத்தில், துருப்பிடித்த குழாயை அகற்றும் பணி நேற்று துவங்கியது.
பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, பாரதிபுரம் முதல் வீதியில், குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வந்தது. குழாய் உடைப்பு காரணமாக, அரை மணி நேரத்துக்கு ஒரு குடம் தண்ணீர் மட்டுமே கிடைப்பதாக, இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும், குழாய் உடைந்து ஓராண்டு ஆகியும் துருப்பிடித்த குழாய் மாற்றப்படவில்லை என, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து, தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து, நகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில், துருப்பிடித்த குழாயை அகற்றப்பட்டு, குழாய் மாற்றும் பணி துவங்கியது. தினமலர் செய்தி எதிரொலியால், தண்ணீர் விரயமாவது தவிர்க்கப்பட்டதுடன், பொதுமக்களின் தண்ணீர் பிரச்னைக்கும் தீர்வு கிடைத்துள்ளது.
