PUBLISHED ON : அக் 12, 2024 12:00 AM

'கொஞ்சம் பலவீனமாகி விட்டாலும், கருணையே காட்டாமல் தாக்கி பேசுகின்றனரே...' என, கூட்டணி கட்சியினரை பார்த்து கொதித்துப் போயுள்ளார், காங்கிரஸ் எம்.பி., ராகுல்.
கடந்த லோக்சபா தேர்தலில், 99 தொகுதிகளில் வெற்றி பெற்றதால், காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது; ராகுலும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரானார்.
இதன்பின், அடுத்தடுத்த சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெற்றால், கூட்டணி கட்சியினர் நம்மை தேடி வருவர் என, கணக்கு போட்டிருந்தார் ராகுல்.
ஹரியானாவில் விவசாயிகள் போராட்டம் காரணமாக, எளிதாக ஆட்சியைப் பிடித்து விடலாம் என்றும் நினைத்திருந்தார். இதனால், கூட்டணி யில் சேருவதற்கு ஆம் ஆத்மி கட்சி விருப்பம் தெரிவித்தும், அவர்களை காங்கிரஸ் புறக்கணித்து விட்டது.
ஆனால், ஹரியானா தேர்தல் முடிவு, எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றி விட்டது. திடீர் திருப்பமாக பா.ஜ., மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது; பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த காங்கிரஸ் பலத்த தோல்வியை சந்தித்தது.
இதற்காகவே காத்திருந்த கூட்டணி கட்சிகள், காங்கிரசை எகிறி அடிக்க ஆரம்பித்து விட்டன. டில்லியில் தனித்து போட்டியிடப் போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
சமாஜ்வாதி, திரிணமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா போன்ற கட்சிகளும், 'காங்கிரசுக்கு இந்த தோல்வி தேவைதான்...' என விமர்சிக்கத் துவங்கி விட்டன.
இதனால் கடுப்பான ராகுல், 'இவர்கள் தோல்வியை சந்தித்ததே இல்லையா... ரொம்பவும் ஓவராகத் தான் பேசுகின்றனர்...' என புலம்புகிறார்.

