PUBLISHED ON : மார் 11, 2026 01:33 AM

'இவரது ஆட்சியில் எப்படி காலம் தள்ளப் போகிறோமோ...' என கவலைப்படுகின்றனர், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அரசு அதிகாரிகள்.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ரேவந்த் ரெட்டி நிர்வாக விஷயத்தில் ரொம்பவே கண்டிப்பானவர். அரசு அலுவலகங்களில் ஒழுங்காக வேலை நடக்கிறதா என்பதை தீவிரமாக கண்காணித்து வருகிறார்.
இந்நிலையில், உயர் பதவிகளில் உள்ள அரசு அதிகாரிகள் மீது, சமீபகாலமாக அதிகமான புகார்கள் வந்ததால், முதல்வர் ரேவந்த் ரெட்டி கடும் கோபத்தில் உள்ளார்.
இதையடுத்து, அலுவலகத்துக்கு அடிக்கடி தாமதமாக வருபவர்கள், வேலை நேரத்தில் வெட்டி அரட்டை அடிப்பவர்கள், வேலை செய்யாமல், அலுவலகத்தில் அமர்ந்து சொந்த வேலையை பார்ப்பவர்கள், கோப்புகளை தேக்கி வைத்திருப்பவர்கள் என, 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் பட்டியல், முதல்வரின் பார்வைக்கு சென்றுள்ளது.
இவர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்ப, முதல்வர் ரேவந்த் ரெட்டி திட்டமிட்டுள்ளார். இதையறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், 'இது நமக்கு சோதனைக்காலம் போலும்...' என, புலம்புகின்றனர்.

