PUBLISHED ON : ஜூன் 24, 2026 12:47 AM

'என்ன செய்தாலும் குற்றம் கண்டுபிடிப்பதே இவர்களுக்கு வேலையாக போய் விட்டது...' என, ஐக்கிய ஜனதா தளம் பற்றி எரிச்சலுடன் கூறுகிறார், பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவியுமான ரப்ரி தேவி.
பீஹாரில், முதல்வர் சாம்ராட் சவுத்ரி தலைமையிலான பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவியின் பிறந்த நாள் விழா, சமீபத்தில் பீஹார் தலைநகர் பாட்னாவில் நடந்தது. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.
விருந்தினர்களுக்கு அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. நாட்டுப்புற இசை நிகழ்ச்சியும் நடந்தது. இதில், சிறப்பாக பாடிய பாடகருக்கு தன் கையில் இருந்த, 'பிரேஸ்லெட்'டை கழற்றி பரிசாக அணிவித்தார் ரப்ரி தேவி.
இதை கடுமையாக விமர்சித்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர், 'அந்த பிரேஸ்லெட் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும். அது, உரிய முறையில் ரப்ரி தேவியால் வாங்கப்பட்டதா அல்லது பினாமி வாயிலாக கிடைத்ததா என்பதை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க வேண்டும்...' என்றனர்.
இதற்கு விளக்கம் அளித்த ரப்ரி தேவி, 'அந்த பிரேஸ்லெட் தங்கம் அல்ல; தங்க முலாம் பூசப் பட்டது. இது தெரியாமல் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் விமர்சிக்கின்றனர்...' என்றார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியினரோ, 'இந்த விஷயம், அந்த நாட்டுப்புற பாடகருக்கு தெரியுமா...?' என கிண்டலாக கேள்வி எழுப்புகின்றனர்.
