PUBLISHED ON : ஏப் 21, 2026 01:16 AM

'சிறிய வாய்ப்பைக்கூட தவறவிட்டு விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் போலும்...' என்று, ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி பற்றி எச்சரிக்கையுடன் பேசுகின்றனர், அங்குள்ள மக்கள்.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. கடந்த 2024ல் நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க, தெலுங்கு தேசம் கட்சிக்கும், ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சிக்கும் இடையே போட்டி நிலவியது.
இறுதியில், தெலுங்கு தேசம் கட்சியுடனான கூட்டணிக்கு, பா.ஜ., பச்சைக்கொடி காட்டியது. அந்த தேர்தலில் தெலுங்கு தேசம், பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றது.
அதன்பின், ஜெகன்மோகன் ரெட்டி, பா.ஜ.,வுக்கு எதிராக அரசியல் செய்வார் என, அனைவரும் நினைத்தனர். ஆனால் அவரோ, பா.ஜ.,வுடன் இன்னும் சுமுக உறவை பின்பற்றி வருகிறார்.
சமீபத்தில், லோக்சபாவில் மகளிர் மசோதா, எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டது. ஆனால், ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சியினர், மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளித்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தினர். மசோதா தோற்கடிக்கப் பட்டதற்கு ஜெகன்மோகனும் கண்டனம் தெரிவித்தார்.
இதை பார்த்த தெலுங்கு தேசம் கட்சியினர், 'நாம் பா.ஜ., கூட்டணியில் இருக்கும்போதே, ஜெகன்மோகனும் துண்டு போடுகிறாரே... உஷாராக இல்லாவிட்டால், நமக்குத் தான் ஆபத்து' என்று, கவலைப் படுகின்றனர்.
