PUBLISHED ON : ஏப் 26, 2024 12:00 AM

'ஆளாளுக்கு அச்சுறுத்துகின்றனர்; பாவம், அவர் ரொம்பவே பயந்து போயிருக்கிறார்...' என, மஹாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே பற்றி பரிதாபப்படுகின்றனர், சக அரசியல்வாதிகள்.
இங்கு சிவசேனா, பா.ஜ., தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில் பா.ஜ., மட்டுமே பலமான கட்சியாக உள்ளது.
உத்தவ் தாக்கரே தலைமையில் செயல்பட்டு வந்த சிவசேனாவை உடைத்து, பெரும்பாலான நிர்வாகிகளை தன் பக்கம் இழுந்து வந்த ஏக்நாத் ஷிண்டே, தற்போது அந்த கட்சியை தன் வசப்படுத்தி விட்டார். முதல்வராகவும் உள்ளார்.
சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசை உடைத்து, பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்களை இழுத்து வந்த அஜித் பவார், தற்போது துணை முதல்வராகி விட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியும், அவருக்கு சொந்தமாகி விட்டது.
இந்த இரண்டு கட்சிகளிலும் நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் மட்டுமே ஷிண்டே, அஜித் பவார் பக்கம் வந்துள்ளதாகவும், பெரும்பாலான கட்சி தொண்டர்கள் இன்னும் உத்தவ் தாக்கரே, சரத் பவார் பக்கமே இருப்பதாகவும், மஹாராஷ்டிராவில் பேச்சு அடிபடுகிறது.
தற்போது இங்கு லோக்சபா தேர்தல் ஐந்து கட்டங்களாக நடக்கிறது. இந்த தேர்தலில் ஷிண்டே, அஜித் பவார் தரப்பு படுதோல்வி அடையும் என்றும், அதன்பின் சிவசேனா, தேசியவாத காங்., கட்சிகள் மீண்டும் முறையே உத்தவ், சரத் பவார் பக்கம் வந்து விடும் என்றும் பலரும் ஆருடம் கூறி வருகின்றனர்.
இதனால் கலக்கம் அடைந்துள்ள ஷிண்டே, 'முதல்வர் பதவி எனக்கு நீடிக்காதா...' என, புலம்பி வருகிறார்.

