ராஜினாமாவை திரும்ப பெறுவதாக ஸ்வேதா மேனன் திடீர் பல்டி
மலையாள திரையுலகில் 'அம்மா' என்கிற பெயரில் நடைபெற்று வரும் நடிகர் சங்கத்திற்கு கடந்த வருடம் தேர்தல் நடைபெற்றது. இதில் நடிகை ஸ்வேதா மேனன் தலைவராக பொறுப்பேற்றார். ஆனால் கடந்த சில மாதங்களாக சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடிகைகள் அன்சிபா ஹாசன், லட்சுமி பிரியா மற்றும் நடிகர் டினி டாம் ஆகியோருக்கிடையிலான பிரச்சனை காவல் நிலையம் மற்றும் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது.
இதனால் கடந்த பொதுக்குழுவில், நிர்வாக குழுவை கலைப்பதாக அறிவித்து தானும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார் ஸ்வேதா மேனன். இதனைத் தொடர்ந்து, கேரளா அரசால் நடிகர் ரமேஷ் பிஷரோடி தலைமையில் தற்காலிக நிர்வாகக் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக, 'அம்மா' அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் தான் அறிவித்த ராஜினாமாவை திரும்பப் பெறுவதாக கூறியுள்ளார் ஸ்வேதா மேனன்.
தான் தவறாக குறிவைக்கப்படுவதாகவும், தனது நற்பெயரை நிரூபிக்கும் வரை தான் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல, கடந்த முறை மோகன்லால் தலைமையிலான நிர்வாக குழு விலகிய போதும் கூட அடுத்த தேர்தல் நடைபெறும் வரை அவர்கள் பொறுப்பில் தொடர்ந்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே ஸ்வேதா மேனன் ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தாலும், அதிகாரப்பூர்வமான ராஜினாமா கடிதத்தை அவர் இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்று தற்போதைய தற்காலிக நிர்வாக குழு தலைவர் ரமேஷ் பிஷாரடியும் உறுதிப்படுத்தியுள்ளார். அதேசமயம், ஸ்வேதா மேனன் முடிவை ஏற்று ராஜினாமா கடிதம் கொடுத்தவர்கள் இரு பிரிவாக பிரிந்து ஸ்வேதா மேனனை விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்கள்.