பிளாஷ்பேக் : சிவாஜி, ரஜினிக்கு முன்னோடியாக இருந்த தங்கவேலு
இந்து மத நம்பிக்கைப்படி மனிதர்களின் நிர்ணயிக்கப்பட்ட ஆயுட்காலம் முடிந்ததும் எமதர்மன் தனது தூதர்கள் மூலம் அவர்கள் உயிரை மேல் உலகத்திற்கு எடுத்துச் சென்று விடுவார் என்பதாகும். எமனின் இந்தப் பணியில் ஒரு சிறு தவறு நடந்தால் எப்படி இருக்கும் என்பது குறித்து பல படங்கள் வெளிவந்திருக்கிறது.
அதாவது ஒருவரின் ஆயுட்காலம் முடியும் முன்பே அவரது உயிரை எடுத்துச் சென்று விட்டால் என்ன நடக்கும் என்கிற மாதிரியான கற்பனை கதை. சிவாஜி நடித்த 'எமனுக்கு எமன்', ரஜினி நடித்த 'அதிசய பிறவி' போன்றவை இது மாதிரியான கதைகளத்தை கொண்டது. ஆனால் இந்த கதைகளுக்கெல்லாம் முன்னோடி கே.ஏ.தங்கவேலு நாயகனாக நடித்த 'நான் கண்ட சொர்க்கம்'.
பிரபுல்லா சக்ரவர்த்தி இயக்கிய 'ஜமாலயே ஜிபந்தோ மனுஷ்' (எமலோகத்தில் ஒரு உயிருள்ள மனிதன்) என்ற வங்க மொழி படம் தான் எல்லாவற்றுக்கும் முன்னோடி. வங்காளத்தின் தலைசிறந்த நாடக ஆசிரியர்களில் ஒருவரான தீனபந்து மித்ரா எழுதிய அதே பெயரிலான நாடகத்தை அடிப்படையாகக் கொண்டே இப்படம் உருவாக்கப்பட்டது. அக்கால வாழ்க்கை மற்றும் சமூகப் பிரச்னைகள் குறித்த நையாண்டி தன்மையிலான கருத்துகளை உள்ளடக்கி, இந்த படம் உருவானது.
இந்தப் படத்தின் உரிமையை பெற்றார் தெலுங்கு தயாரிப்பாளர் சி.புல்லையா. தெலுங்குப் பதிப்பிற்கு 'தேவாந்தகுடு' என்றும், தமிழ்ப் படத்திற்கு 'நான் கண்ட சொர்க்கம்' என்றும் பெயரிட்டார். தெலுங்கு பதிப்பில் என்.டி. ராமராவ் நாயகனாக நடித்தார். தமிழ் பதிப்பில் கே.ஏ.தங்கவேலு நாயகனாக நடித்தார். அவருடன் பி.டி.சம்பந்தம், சாய்ராம், பாண்டியன், பி.வி.நரசிம்மபாரதி, சவுகார் ஜானகி, சுந்தரிபாய், மோகனா உள்ளிட்ட பலர் நடித்தனர். கே.எஸ். கோபாலகிருஷ்ணன் உரையாடல் எழுதினார். நஞ்சப்பா ஒளிப்பதிவு செய்தார். இப்படத்தின் படப்பிடிப்பு விஜயா-வாஹினி ஸ்டுடியோவில் நடந்தது. கே.ஏ. தங்கவேலு நாயகனாக நடித்த ஒரு சில படங்களில் இது முக்கியமானது.