உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : 80ல் தியாகராஜன் ; 4 படங்களில் ஒரே கேரக்டர்

பிளாஷ்பேக் : 80ல் தியாகராஜன் ; 4 படங்களில் ஒரே கேரக்டர்

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், தொழிலதிபர் என பன்முகங்களை கொண்ட தியாகராஜனுக்கு நேற்று 80வது பிறந்தநாள். அவருடைய சினிமா பயணத்தில் ஒரு துளி இது...

'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் வில்லனாக அறிமுகமான தியாகராஜன், ஆரம்ப காலகட்டங்களில் தொடர்ந்து வில்லனாக நடித்தார். 'மலையூர் மம்பட்டியான்' படத்தில் ஹீரோவாகி அதன் பிறகு தொடர்ந்து ஹீரோவாக நடித்தார். 'நியூ டெல்லி' என்ற மலையாளப் படத்தில் மீண்டும் வில்லனாக நடித்தார். காரணம் அவருக்கு பிடித்த நடிகரான மம்முட்டி அதில் ஹீரோ.

ஹீரோவுக்கு உதவி செய்யும் நல்லவரான வில்லன் கதாபாத்திரம். உடம்பு முழுவதும் சங்கிலியால் கட்டி திகார் சிறையில் தியாகராஜனை அறிமுகப்படுத்தும் காட்சியிலேயே பொறி பறக்கும். மம்முட்டிக்கு கூட அப்படியொரு அறிமுகம் நியூ டெல்லியில் இல்லை.

சேலம் விஷ்ணு என்ற தமிழ் பேசும் கிரிமினலாக இதில் அவர் நடித்தார். படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாக அதனை தெலுங்கில் 'அந்திம தீர்ப்பு' என்ற பெயரிலும், ஹிந்தி, கன்னடத்தில் 'நியூடெல்லி' என்ற பெயரிலும் ரீமேக் செய்தனர். இந்த மூன்று ரீமேக்கிலும் சேலம் விஷ்ணு கேரக்டரில் தியாகராஜனே நடித்தார்.

இந்த கேரக்டர் பாப்புலராகவே 1990ம் ஆண்டு அந்த வில்லன் கேரக்டரையே பிரதானமாக்கி 'சேலம் விஷ்ணு' என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்து, இயக்கி, நடித்தார். அவருக்கு ஜோடியாக ரூபினி நடித்தார். சரத்குமார், கீதா, கவுண்டமணி, வினு சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்தனர். சங்கீத ராஜன் இசை அமைத்தார். வில்லன் சேலம் விஷ்ணு தமிழில் ஹீரோ சேலம் விஷ்ணுவாகவும் வெற்றி பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !